போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்கள்... விமானத்தில் பெங்களூர் அழைத்துச் சென்று ஊக்குவிப்பு!
பல்லாவரம் மறைமலை அடிகள் அரசினர்
மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் சட்ட நுழைவுத் தேர்வு, மெரிட்
ஸ்காலர்ஷிப் மற்றும் தமிழ் திறனாய்வுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளில்
வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இப்பள்ளியின் 13 மாணவ,
மாணவிகள் கடந்த ஏப்.18ம் தேதி பெங்களூருவுக்கு விமானம் மூலம் அழைத்துச்
செல்லப்பட்டு, அங்குள்ள அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் விஸ்வேஸ்வரய்யா
தொழில், தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
பள்ளி நிர்வாகமும், 'தட்ஸ் மை சைல்ட்' (Thats my child) அமைப்பும் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டனர். ஆசிரியர் இராஜேஸ்வரி அந்த மாணவர்களுடன் சென்றார். இதே போல் கடந்த வருடம் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்தை பார்வையிட விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1962 ல் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது என்பதை தெரிந்துகொண்டோம். மேலும் இந்த விமானப் பயணத்துக்கு உதவிய தட்ஸ் மை சைல்ட் அமைப்புக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் நன்றி என்று மாணவர்கள் கூறினர்.
No comments