ஜுன் 9ஆம் தேதி இந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
முருகப் பெருமானுக்குரிய முக்கியமானவிழாக்களில் வைகாசி விசாகம் ஒன்று. வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக கூறப்படுகிறது. விசாக நட்சத்திரத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
2025ஆம் ஆண்டு, வைகாசி மாதத்தில் (தமிழ் நாட்காட்டியின்படி) அதாவது ஜூன் 9ஆம் தேதி திங்கட்கிழமை இந்த விழா வருகிறது. ஜூன் 08ம் தேதி பகல் 02.10 மணிக்கு துவங்கி, ஜூன் 09ம் தேதி மாலை 04.40 வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. ஆனால் ஜூன் 10ம் தேதி பகல் 12.27 மணிக்கு தான் பெளர்ணமி திதி துவங்குகிறது. இதனால் ஜூன் 9ஆம் தேதி நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் உள்ளதால் வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள், அன்றைய தினம் விரதம், வழிபாடு, பூஜைகளை மேற்கொள்வார்கள்.
அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14ஆம் தேதி சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக கணக்கிடப்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்
No comments