Breaking News

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு வெளியிட்ட மற்றொரு ஹேப்பி நியூஸ் - சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

 


கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பு மற்றும் வார விடுமுறையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை முதல் 2,510 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. வெயில் அதிகரிப்பால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என கூறப்பட்ட நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதமான கால சூழ்நிலை நிலவுகிறது.

இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்டமிட்டப்படி ஜூன் 2 ஆம் தேதி ஒன்று முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜுன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பு மற்றும் வார விடுமுறையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை முதல் 2,510 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு வரும் 30ம் தேதி 570 பேருந்துகளும், 31ம் தேதி 605 பேருந்துகளும் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு 30ம் தேதி 100 பேருந்துகளும், 31ம் தேதி 90 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது..

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள போக்குவரத்துறை தொலைதூர பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்னதாக முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

No comments