Breaking News

2,748 கிராம உதவியாளர் காலி பணியிடங்கள்: எழுத்துத் தேர்வுக்கு தயாராவது எப்படி?

மாநிலம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 7ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் 19ம் தேதிக்குள் நேர்காணல் நடத்தி முடித்து பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று முன்னதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. எனவே, குறைந்த நாட்களே இருப்பதால், கிராம உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அடுத்த நடைமுறை என்ன?

அடுத்தக் கட்டமாக விண்ணப்பத்தார்கள் திறனறிதல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த தேர்வு, வாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இருக்கும். எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்.

அதன்பின், நேர்காணல் தேர்வு, மூல சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் அதிகமதிப்பெண் பெற கிராம உதவியாளர் பதவி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்:

எழுத்துத் தேர்வுக்கு பாடத்திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழ்கத்தில் வருவாய் நிர்வாக கட்டமைப்புகள் குறித்த பொது விவரங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் இயங்கி வருகிறது. நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் கோட்ட நிர்வாகம் (Sub Divisional Level), வருவாய் வட்ட நிர்வாகம் (Taluk Level), குறுவட்ட நிர்வாகம் (Firka), வருவாய் கிராம நிர்வாகம் (Revenue Village) என பிரிக்கப்பட்டுளளது.


மாநிலத்தின் இருக்கும் 94 வருவாய் கோட்டங்கள் சார் வட்டாச்சியர் தலைமையிலும், 313 வருவாய் வட்டங்கள் தாசில்தார் தலைமையிலும், 1195 குறுவட்டங்கள் வருவாய் அலுவலர் தலைமையிலும், 16,000க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் கிராம நிர்வாக அலுவலர் (VAO) தலைமையிலும் இயங்கி வருகிறது.


தமிழ்நாடு நிர்வாகத் துறை - பணியிடங்கள் விவரம்



வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்த, கிராம நிர்வாக அலுவலர்களின் கீழ் கிராம உதவியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

1995க்கு முன்பு வரை, கிராம உதவியாளர்கள் தற்காலிக, தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்று வந்தனர். 1995ம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண்.625 கீழ் இவர்கள் முழு நேரப் பணியாளராக மாற்றப்பட்டனர். ஊதிய உயர்வு, ஓய்வூதியம், கருணை அடிப்படையிலான வேலை உள்ளிட்டவைகளும் சிறப்பு ஊதிய விதியின் கீழ் வழங்கப்படுகிறது.

கிராமக் கணக்குகளைப் பராமரிப்பது, சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புவது, இயற்கை பேரிடரின் போது மேல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புவது, கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுப்பது, முதியோர் ஒய்வூதியம் வழங்குவது குறித்தான பணிகளைக் கவனிப்பது, பொதுச் சொத்துகள் பற்றிய பதிவேட்டைப் பராமரிப்பது , வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்களை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் கிராம நிர்வாகத்தின் கீழ் வருகிறது வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள விஏஓ-விற்கு கிராம உதவியாளர்கள் உதவ வேண்டும்.

எனவே, கிராம உதவியாளர் பதவியின் கடமைகளை முதலில் தெரிந்து கொண்டு, இதுதொடர்பான புத்தகம், கட்டுரைகளை படிக்கத் தொடங்குகள். உங்கள் அருகில் உள்ள கிராம நூலகத்தை பயன்படுத்தத் தொடங்குங்கள். கல்வி சான்றிதழ் , சாதி சான்றிதழ் , இருப்பிடச் சான்றிதழ் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைத்திருங்கள்.

No comments