Breaking News

தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?


தீபாவளி நாட்களில் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்பது ஐதீகம். இந்த எண்ணெய் குளியல் எடுக்க காரணம் என்ன?
எப்படி எடுக்க வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.

எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறையே இன்று முற்றிலும் காணாமல்போகும் நிலையில் இருக்கிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியன்று மட்டும் எண்ணெய் குளியல் சம்பிரதாயமாக நடைபெறுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் எண்ணெய் குளியலுக்கு என்று சில தினங்களை குறிப்பிட்டுள்ளனர். ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் குளியல் கூடாது என்று வகுத்துள்ளனர்.

எண்ணெய் குளியல் தீபாவளிக்கு எடுக்க காரணம் என்ன?

தீபாவளியன்று மட்டும், நல்லெண்ணெயில் திருமகளும், நீரில் கங்கையும் வசிப்பதாக ஐதீகம். ஆகவே, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து நீராடினால், இருவருடைய அருளையும் பெறலாம் என்பது கருத்து. இன்னொரு காரணம், தீபாவளியன்று, லட்சுமி மற்றும் குபேர பூஜை, கேதார கௌரி விரதம் ஆகியவற்றை மேற்கொள்வார்கள். ஆகவே அன்று எண்ணெய் குளியல் எடுப்பது நல்லது.எண்ணெய் குளியலின் அவசியம் என்ன?

நமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது. முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது. இந்த இரண்டுமே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இருப்பினும், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

எண்ணெய் குளியல் செய்ய சரியான நேரம் எது?

எண்ணெய் குளியல் காலை 6.30 - க்குள் தொடங்கி விட வேண்டும். இதமான வென்நீரில் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சீயக்காய் அல்லது நலுங்குமாவை பயன்படுத்தலாம். எளிமையான உணவுகள் உண்ண வேண்டும். எண்ணைக் குளியல் செய்த பகலுறக்கம் கூடாது. கடுமையான வெய்யிலில் வேலை செய்யக்கூடாது. குளிர்ந்த உணவுகள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

பலன்கள்

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நம்மைச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாகின்றது என்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வளையம் இருப்பதால் கோள்களிலிருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய முடியாமல் போகின்றது. மேலும் உடற்சூடு சீராகும், அழகுகூடும், சருமம் மென்மைபெரும். ஐம்புலனுக்கும் நல்ல பலன் கிடைக்கும், தலை முடி நன்கு வளரும், நல்ல குரல் வளம் கிடைக்கும், எலும்புகள் பலப்படும்.

என்ன எண்ணெய்யில் குளிக்கலாம்

உடலில் தேய்ப்பதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களின் குளிர்மை சிலருக்கு ஒத்துவரவில்லை என்றால், மேற்படி எண்ணெயுடன் இரண்டு பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து முப்பது விநாடி அடுப்பில் காய வைத்துத் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சி குறைவாக இருக்கும். ரிஃபைண்டு ஆயில் வேண்டாம்.

சித்த மருத்துவர் ஆலோசனையுடன் நம் உடலுக்கு நலம் தரும் பிரத்யேக எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.
நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய் குளியல் செய்யாதவர்கள் எண்ணெய் குளியல் செய்ய விரும்பும்போது ஆரம்பத்தில் சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அதற்காகப் பயப்படத் தேவையில்லை. எண்ணெய் குளியலை முறையாகப் பின்பற்றினால், உடல் பழகிவிடும். மேற்கூறிய தொந்தரவுகள் விலகிவிடும்.

No comments