Breaking News

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: பெட்டி பெட்டியாக குவியும் செல்வம்.. திடீர் ஜாக்பாட் யாருக்கு?

 

நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 30ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகின்றன.

தீபாவளிக்கு முன்பாக ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரும் என்று பார்க்கலாம்.

துலாம்: இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறார். ராகு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு வரப்போகிறார். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கடன் வாங்க வேண்டாம் யாருக்கும் கடன் கொடுக்கவும் வேண்டாம் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். ராகு பகவான் நோய்களையும் கடனையும் அதிகரிப்பார். வயிறு செரிமான கோளாறுகள் நீங்கும். விரைய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பிள்ளைகளுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வண்டி வாகனம், எலக்ட்ரானிக் சாதனம் வாங்குவீர்கள். நல்ல வேலையும் உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு கிடைக்கும். வெள்ளிக்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

விருச்சிகம்: ராகுவும் கேதுவும் உத்யோக உயர்வையும், பணவரவையும் தரப்போகின்றனர். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புகழ் கூடும். ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவும் லாப ஸ்தானமான 11வது வீட்டில் அமர்ந்துள்ளனர். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். ஆன்மீக விசயங்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலக விசயமாக வெளிநாடு பயணம் அடிக்கடி செல்வீர்கள். புதிதாக சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ராகுவினால் டென்சன் குறையும், கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும். செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு: இந்த ராகு கேது பெயர்ச்சி வாழ்க்கையில் வெற்றியை தேடித்தரும். நான்காம் வீட்டில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்யப்போவது சிறப்பான அம்சமாகும். வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சிலர் புதிய வீடு மாறுவீர்கள். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் இழப்பை சரி செய்யலாம். பொருளாதார நிலை சீரடையும். இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு சென்று துர்க்கையை வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்: உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் அமரப்போகும் ராகுவினால் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமரப்போகும் கேதுவினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் சில நேரங்களில் நீங்கள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம். வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள்.

கும்பம்: இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் ராசிக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் - கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் குடும்பத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் இருந்தாலும் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பண வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள். கேது பகவான் உங்கள் உடல்நிலையில் சிரமத்தை ஏற்படுத்துவார். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். கடன் கொடுக்கும் முன்பும் கடன் வாங்கும் முன்பாகவும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. தினசரியும் துர்க்கா அஷ்டோத்திரம் படிக்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்: வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடும் நேரம் வந்து விட்டது. ஜென்ம ராகுவினாலும் களத்திர ஸ்தான கேதுவினாலும் நன்மை கலந்த தீமைகள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணம் விசயத்தில் யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு சீராகும். ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் சத்ரு நாசம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். செவ்வாய்கிழமையில் துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

No comments