Breaking News

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய 5 முக்கிய பண்புகள்!







உங்கள் குழந்தைகளை சில மணி நேரங்கள் தனித்து விட்டால் அவர்கள் தன்னைத்தானே கவனித்துக்கொள்வார்களா?

நீங்கள் இல்லாத சூழ்நிலையில் அவர்களின் அன்றாட வேலைகளை அவர்களே செய்ய முடியுமா?

 குழந்தைப் பருவத்திலேயே சில விஷயங்களை தனியாக எதிர்கொள்ள பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளீர்களா? 
குழந்தை வளர்ப்பு என்பது வீட்டிலும் சமூகத்திலும் நேர்மறை/எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான விஷயம்.

 குழந்தையின் குணநலன்கள், அவர்களது நடவடிக்கைகள் பெரும்பாலாக பெற்றோரின் வளர்ப்பிலேயே இருக்கிறது. 

பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்க நினைக்கிறீர்கள்.

 அதுபோல அறிவுரீதியான முக்கிய திறன்களையும் கற்றுக்கொடுக்க விழைகிறீர்கள். 

பள்ளிக் கல்வியைத் தாண்டி வாழ்க்கைக் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். 

அந்தவகையில் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்:-

1. நேரத்தை நிர்வகித்தல்
குழந்தைப் பருவத்தில் நேரத்தை நிர்வகித்து என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் சில பண்புகள் வேண்டுமெனில் அவற்றை இளம்வயதிலேயே கற்றுக்கொடுப்பது நல்லது. 

நேரத்தை சரியாகப் பயன்படுத்தும் கலையை இக்காலத்தில் ஒவ்வொருவரும் பெற வேண்டும். நேரத்தின் அருமை தெரிந்தவர்கள் மட்டுமே அதனை உபயோகமாக கழிக்க முடியும். 

அந்த வகையில், குழந்தைகள் பலரும் காலையில் தாமதமாக எழுந்து பள்ளிக்கும் தாமதகமாக செல்வர். இல்லையெனில் நீங்கள் அவர்களை பலமுறை எழுப்ப வேண்டியிருக்கும். 

நேரத்தை நிர்வகிக்க முதலில் சொல்லிக்கொடுக்க வேண்டியது, சரியான நேரத்தில் அவர்களை தானாகவே  எழுந்திருக்க வைப்பது.

 குழந்தைகளை எழுப்பும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். அலாரம் வைத்து அவர்களையே எழுந்திருக்கச் சொல்லுங்கள். 

எந்த நேரத்தில் எழுந்தாள் சரியான நேரத்தில் பள்ளிக்குத் தயாராகலாம், பள்ளிப் பாடங்களை எப்போது முடிக்க வேண்டும், எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்றெல்லாம் கற்றுக்கொடுங்கள்.

2. முடிவெடுக்கும் திறன்
கல்வி, வேலை, வாழ்க்கைத் துணை ஆகிய மூன்றும் ஒவ்வொருவரது வாழ்க்கையில் சரியாக முடிவெடுக்க வேண்டியவை. 

சிறு வயதிலிருந்தே நல்ல முடிவுகளை எடுப்பது எப்படி என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக்கொடுங்கள். 

ஒவ்வொன்றுக்கும் பிடித்த விஷயங்களில் நன்மைகள், தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க பழக்க வேண்டும். 

3. நிதி மேலாண்மை 
நிதி மேலாண்மை வாழ்க்கைத் திறன்களில், இது மிகவும் அடிப்படையான ஒன்றாகும். 

ஒவ்வொரு வாரமும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, உங்கள் பிள்ளைகளின் செலவுகளுக்கு குறிப்பிட்ட அளவு பணம் கொடுங்கள். 

அத்துடன் சிறிது பணத்தை சேமித்து வைக்க ஊக்கப்படுத்துங்கள். அவர்களது செலவுகளையும் கண்காணித்து தவறான செலவுகளை சரிசெய்யுங்கள். 

தேவைப்படின், குழந்தை பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கி, மாதம் ஒருமுறை அவர்கள் சேமித்து வைத்த, பரிசாகப் பெற்ற பணத்தை சேமித்து வையுங்கள். 

பணம் சேமிக்க நீங்களும் ஒரு சிறு தொகையை அவ்வப்போது கொடுத்து ஊக்குவிக்கலாம். 

4. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
அடுத்த தலைமுறையினருக்கு இன்றைய பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. 

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் மாசினை குறைக்கும் வழிகளில் ஈடுபடுவது ஆகியவற்றை குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே புகுத்துவது சுற்றுச்சூழல் மீதான அக்கறையுடன் இருக்க உதவும். 
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏன் முக்கியம் என்பதை உங்கள் குழந்தைக்கு கற்பிக்க வீட்டிலேயே எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யுங்கள். 

உங்களிடம் கார் இருந்தால் ஓரிரு நாள்கள் பேருந்தில் பயணம் செய்து காற்று மாசினைக் குறைக்கலாம். 

வீட்டைச் சுற்றிலும் மரங்கள் நடுவது, குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். 

5. பிரச்னைகலிருந்து மீளுதல், மற்றவர்களோடு பொருந்தி வாழ்தல்
உங்கள் குழந்தைக்கு கற்பிக்க வேண்டிய இரண்டு முக்கிய திறன்கள் இவை. பிரச்னைகள் இன்றி மனித வாழ்க்கை இல்லை. 

பிரச்னைகளை கையாளத் தெரியாமல்தான் பலரும் இன்று தவறான முடிவுகளுக்குச் செல்கின்றனர். 

எனவே, பிரச்னைகளை எப்படி கையாள வேண்டும், அதிலிருந்து எவ்வளவு விரைவாக மீள வேண்டும் என கற்றுக்கொடுங்கள். 

பிரச்னைகளுக்கு ஒவ்வொரு முறையும் நீங்கள் தீர்வு வழங்காமல் அவர்களேயே முடிவெடுக்கச் செய்து கண்காணியுங்கள்.

 சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கும் திறனை வளர்க்க வேண்டும். 

அடுத்ததாக உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்த வாழ்க்கையை வாழ வேண்டும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரிக்கவும் அன்பு பாராட்டவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

 உறவினர்களின் மதிப்பை புரிய வைக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொடுப்பது இன்றியமையாதது, இதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள் என தெரிந்துகொள்வார்கள்.

 குழந்தைகளின் கல்வித்திறனுடன் வாழ்க்கைக்குத் தேவையான மற்ற திறன்களையும் அளிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது.

No comments