Breaking News

ஆம்பூரில், போலி தங்க காசுகள் கொடுத்து ஓட்டு வாங்கி தலைமறைவான சுயேச்சை வேட்பாளர், அவரது கணவரை பொது மக்கள் தேடி வருகின்றனர்.

 

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் 36 வது வார்டை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பெண்கள் இன்று மதியம் 1:00 மணிக்கு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்தனர்.

அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது: ஆம்பூர் நகராட்சி 36வது வார்டை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் துரைப்பாண்டி என்பவருக்கு கவுன்சிலர் சீட் கிடைக்கவில்லை. இதனால் அவரது மனைவி மணிமேகலை சுயேச்சையாக தென்னை மரச் சின்னத்தில் போட்டியிட்டார்.வேட்பாளர் மணிமேகலை கணவர் துரைபாண்டியுடன் வந்து, தங்களுக்கு ஒட்டு போடும்படி கேட்டு, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கிராம் தங்க காசு என 1,500 பேருக்கு கொடுத்தார். நாங்களும் தங்க காசுக்காக ஆசைப்பட்டு வாங்கிக் கொண்டு, அவருக்கே ஓட்டு போட்டோம்.

தங்க காசுகளை ஆம்பூர் கஸ்பாவில் உள்ள அடகு கடையில் கொடுத்து பணம் கேட்டதற்கு, சோதனை செய்த கடைக்காரர் அனைத்தும் பித்தளை காசு என தெரிவித்தார். வாக்காளர்களை ஏமாற்றிய மணிமேகலை வெற்றி பெறும் நிலையில் உள்ளார். அவரது வீட்டுக்கு சென்ற போது மணிமேகலையும், கணவர் துரைபாண்டியும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கண்டுபிடித்து தங்க காசுகளை வாங்கி கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments