Breaking News

மாணவர் எண்ணிக்கைபடி அரசு பள்ளிகளில் 2,236 உபரி ஆசிரியர்கள்: பணிநிரவல் செய்ய கல்வித் துறை முடிவு

 

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள 2,236 இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதில் உள்ள உபரி பணியிடங்கள் பணிநிரவல் செய்யப்படும். அதன்படி வரும் 2024-25-ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இதற்கிடையே 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2,236 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இந்நிலையில் பணிநிரவல் கலந்தாய்வானது தற்போது நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையையும் கருத்தில் கொண்டு நடத்தப்பட உள்ளது. எனவே, குறைந்த மாணவர்கள் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் வியூகங்கள் அமைத்து சேர்க்கையை அதிகரிப்பதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு தகவல்: கூடுதல் மாணவர்களை பள்ளிகளில் சேர்த்து உபரி பணியிடங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், உபரியாக உள்ளவர்களின் விவரங்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி சார்ந்த ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments