Breaking News

தொடர் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ ஆலோசனை :

அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சேர்ந்து, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பாக போராடி வருகின்றன. இந்த கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து, ஆட்சிக்கு நெருக்கடி தரப்பட்டது.அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., சார்பில், ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலும், வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து,

 இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்னும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிருப்தியில் உள்ளன.இந்நிலையில், கோரிக் கைகளை வலியுறுத்தி, வரும் 28ம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அப்போது, மூன்று லட்சம் பேரை திரட்டி, சென்னையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டவும், தி.மு.க., அரசுக்கு தங்களின் வலுவை காட்டவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதன் பிறகும், கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால், பொது தேர்வுகள் முடிந்ததும், லோக்சபா தேர்தலுக்கு முன், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளதாக, ஜாக்டோ ஜியோ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

No comments