Breaking News

School Morning Prayer Activities - 06.12.2023


திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை

குறள்:314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

விளக்கம்:

 துன்பம் தந்தவரை தண்டித்தல் என்பது அவர் வெட்கப்படும்படி நல்லது செய்து விடுவதே.

பழமொழி :

Cut the coat according to the cloth

வரவுக்குத்

தகுந்த செலவு செய்

இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

உடல் நலம் உள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்து தான் – துருக்கி

பொது அறிவு :

1.தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு

விடை: பாயும் குதிரை

2. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்

விடை: குடியரசுத் தலைவர்

English words & meanings :

 knack - a special talent or skill. தனித்திறமை. knighthood - a title given to a man for his service to his country மாவீரர் பட்டம்

ஆரோக்ய வாழ்வு :

பாரிஜாத பூக்கள்: பாரிஜாத மரத்தின் இலைகளை அம்மியில் நன்றாக அரைத்து அதன் சாறை எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமலுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும்.

டிசம்பர் 06 இன்று

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள்

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.[3]

நீதிக்கதை

 வீமபுரி என்ற நாட்டை வீரகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதியும், நேர்மையும் தவறாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் நாட்டு மக்கள் பயமும் கவலையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

அந்த அரசன் தன்னாட்டு மக்களின் செயல்களை கண்காணிக்க மாறுவேடம் அணிந்து செல்வது வழக்கம். அவ்வாறு அவன் மாறுவேடம் அணிந்து செல்லும்போது வழியில் உழவன் ஒருவன் வயலில் உழுது கொண்டிருப்பதை பார்த்தான். அவனைக் கண்ட மாறு வேடத்தில் இருந்த அரசன், “எல்லாம் வல்ல இறைவன் உனக்கு நல்ல வலிமையையும், நீண்ட வாழ்நாளையும் வழங்குவானாக” என்று வாழ்த்தினான். 


அதற்கு அந்த உழவன் மாறுவேடத்தில் இருந்த அரசனைப் பார்த்து, “தாங்கள் என்மீது காட்டும் அன்பிற்கு மிக்க நன்றி” என்றான். “நிலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது?” என்று மாறுவேடத்தில் இருந்த அரசன் அந்த உழவனிடம் கேட்டான்.

அதற்கு உழவன், “மாதத்திற்கு நூறு வெள்ளி காசுகள் கிடைக்கின்றன” என்று பதில் அளித்தான். “அவ்வளவு தொகையை என்ன செய்கிறாய்?” என்று அரசன் கேட்டான். ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்கு வரியாக செலுத்துகிறேன். இன்னொரு பங்கை நான் பட்ட கடனுக்கு அடைகிறேன். மற்றொரு பங்கை கடனாக தருகிறேன். நான்காவது பங்கை வீசி ஏறிகிறேன். இறுதிப் பங்கை எனக்காக செலவு செய்கிறேன்” என்று புதிராக பேசினான்.

இதை கேட்ட மாறுவேடத்தில் இருந்த அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் மாறுவேடத்தை   கலைத்தான். இதுவரை தன்னிடம் பேசியவர் அரசர் தான் என்பதை அறிந்த உழவன் அவரை பணிவுடன் வணங்கினான்.

“நீ சொன்ன பதிலில் வரியாக தருவதும், உனக்காக செலவு செய்வதும்தான், எனக்கு புரிந்தது. மற்றவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டான் அரசன்.

அதற்கு உழவன் அரசே, “என் வருமானத்தில் ஒரு பங்கை என் தாய் தந்தையருக்கு செலவு செய்கிறேன். என்னை வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு செலவு செய்வதை கடனை அடைக்கிறேன் என்றேன்.இன்னொரு பங்கை என் மகனுக்கு செலவு செய்கிறேன். பிற்காலத்தில் என்னை காப்பாற்ற போகிறவன் அவன். அதனால், அதை கடனாக தருகிறேன் என்றேன். 


நான்காவது பங்கை என் மகளுக்கு செலவு செய்கிறேன். எப்படி இருந்தாலும் திருமணம் ஆகி இன்னொருவன் வீட்டில் வாழ வேண்டியவள். அதனால் அந்த செலவை வீணாகத் தெருவில் எறிகிறேன் என்றேன்.

அந்த  உழவனின் பதிலை கேட்டு மகிழ்ந்த அரசன். உன் அறிவு கூர்மை மிகவும் நன்றாக உள்ளது. “இந்த விளக்கத்தை நான் இல்லாமல் நீ யாரிடமும் கூறக்கூடாது. அப்படி கூறினால் உன் உடலில் உயிர் இருக்காது” என்று சொல்லிவிட்டு சென்றான்.

அரசவைக்கு வந்த அரசன் தான் கேட்ட புதிரை அனைவரிடமும் சொல்லி அதற்கு விளக்கம் கேட்டான். ஒருவராலும் அதற்கு விளக்கம் கூற முடியவில்லை. இந்த புதிருக்கு யார் விளக்கம் கூறினாலும் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும், என்று அறிவித்தான் அரசன்.

அரசனுக்கு இந்த புதிரை கூறியவர் யார் என்பதை அறிந்து கொண்டான் அமைச்சர்களுள் ஒருவன். அந்த அமைச்சர் நேராக இந்த உழவனிடம் சென்றான்.

“அரசு நாணய சாலையில் புத்தம் புதிதாக அச்சடித்த இந்த ஐநூறு பொற்காசுகளை பெற்றுக்கொண்டு அரசரிடம் சொன்ன புதிருக்கான விளக்கத்தை என்னிடம் கூறு” என்றான் அமைச்சர்.

கண்ணை பறிக்கும் ஒளியுடன் கூடிய பொற்காசுகளை கண்ட உழவன் அரசரை எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த புதிருக்கான விளக்கத்தை கூறி பொற்காசுகளை பெற்றுக் கொண்டான்.அரண்மனை திரும்பிய அமைச்சர் நேரடியாக அரசிடம் சென்று புதிருக்கான விளக்கத்தை கூறினான். உழவன் தான் பதில் கூறி இருக்கிறான் என்பதை அரசன் அறிந்து கொண்டு, அவனை இழுத்து வருமாறு தன்னுடைய காவலர்களுக்கு ஆணையிட்டான்.

உழவனைப் பார்த்து நீ ஏன்  பதிலை கூறினாய்? நான் இல்லாமல் பதில் கூற கூடாது எனக் கூறியிருந்தேனே? என அரசர் கேட்க, அரசே, பொற்காசுகளில் உங்கள் முகம் பொறிக்கப்பட்டு இருந்தது. அதனைப் பார்த்தே நான் பதில் கூறினேன், என அரசனிடம் உழவன் கூறினான்.

உழவனின் அறிவு கூர்மையை  அறிந்த அரசன் அவனுக்கு பரிசுகள் பல தந்து அனுப்பி வைத்தான். உழவனின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றியது அவருடைய அறிவு கூர்மையே ஆகும்.

நீதி : ஒருவரிடம் இருக்கும் அறிவு மிக சிறந்த செல்வமாகும். அது தக்க சமயத்தில் அவனுக்கு உதவும். எனவே அனைவரும் அறிவை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள் - 06.12.2023

*ஆந்திராவில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது 

மிச்சாங் புயல்.

*சென்னை- நெல்லூர் சாலையில் கடும் வெள்ளம்; 4 அடி உயரம் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து முடக்கம்.

*சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

*சென்னையில் மீண்டும் விமான சேவை தொடங்கியது.

*ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; மோகன் பகான் - ஓடிஸா அணிகள் இன்று மோதல்!

*புரோ கபடி: புனே மற்றும் பெங்கால் அணிகள் வெற்றி.

Today's Headlines

*Michong storm crossed the Andhra Pradesh coast at 110 kmph

 *Heavy flood on Chennai-Nellore road;  Traffic blocked due to 4 feet height water level.

 * Today is  holiday for schools and colleges in four districts including Chennai.

 *Flight service resumed in Chennai.

 *ISL Football Series;  Match between Mohan Bagan and Odisha teams !

 *Pro Kabaddi: Pune and Bengal win.

Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments