Breaking News

சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க இதை பண்ணுங்க..


புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் ஆயுஷ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இம் மருத்துவமனையில் ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, யோகநலன் உள்ளிட்ட மருத்துவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது.
இங்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவம் பார்த்து சென்று வருகின்றனர்.

இதில் ஆயுர்வேத பிரிவில் சர்க்கரை நோய்க்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு ஆயுர்வேத தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பத்மவதம்மா முன்னிலை வகித்தார். இதில் ஆயுர்வேத மருத்துவர் ஜீவா ஆனந்த் சர்க்கரை நோய் குறித்து சிறப்புரை ஆற்றுகையில், "தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகாசனம், சரியான உணவு விகிதம், நேரத்துக்கு தூங்க வேண்டும். தினமும் மாலை வேளையில் குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும்.

துவர்ப்பு, கசப்பு சத்துள்ள பொருட்களை சாப்பிட வேண்டும். மேலும் சர்க்கரை நோய் அதிகமானால் கண் விழித்திரையில் உள்ள மெல்லிய ரத்த நாளங்களில் ரத்தக்கசிவு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் இடங்களில் வடுவாக மாறும். பார்வை குறைவு ஏற்படும். சிறு நீரில் புரதச்சத்து வெளியேறும். உடல் எடை குறையும். புரதசத்து வெளியேறாமல் தடுக்க ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளது. மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் பதற்றம் அடைதல் மற்றும் கோபம் இருக்கக் கூடாது. இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

நோன்பு இருத்தல் வேண்டும், பார்லி அரிசிஃன, பச்சைபயிறு, பழைய அரிசி, பாகற்காய், வெண்டைக்காய், புடலங்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி, நெல்லிக்காய், நீர்மோர் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி, நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவினை உட்கொள்ள வேண்டும்.

மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சிறுதானிய வகையில் திணை அரிசியை தவிர்த்து மற்ற அனைத்தையும் உட்கொள்ளலாம் என்றும், குறிப்பாக வரகு அரிசி பயன்படுத்தி வந்தால் அதிக நலம் என்றும், யோக பயிற்சி மேற்கொள்ள வேண்டும்" என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு சர்க்கரை நோய் கருத்தரங்கில் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர். மேலும் இக்கருத்தரங்கமானது வாரம் தோறும் புதன்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெறும் என்றும் மருத்துவ அதிகாரி ஜீவா ஆனந்த் தெரிவித்தார். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார்.

No comments