Breaking News

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி..? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!

குழந்தைகளை பெரியவர்கள் ஈர மண்ணுடன் ஒப்பிட்டு பேசுவதுண்டு. காரணம், ஈர மண், அதுவாகவே அழகான பானையாக மாறிவிடாது.

அது, அழகான வடிவம் பெற்ற சட்டியாக மாறுவதும் உடைந்த சட்டியாக மாறுவதும் அதை செய்பவர்கள் கையில்தான் உள்ளது. அதே போலத்தான் குழந்தைகளும். அவர்களை ஆரம்பத்திலேயே அடித்து துன்புருத்து வளர்ப்பதால், அது அவர்களின் பிற்காலத்தை பெரிதாக பாதிக்கும்

இப்போது வளர்ந்து பெரியவர்களாக இருக்கும் பெரும்பாலானோரை சிறு வயதில் அவர்களை வளர்த்தவர்கள் கண்டிப்பாக ஒரு முறையேனும் அடித்திருப்பர். இவ்வாறு அடித்து வளர்க்கும் முறை, கடந்த சில வருடங்களில் மாறியுள்ளது. இருப்பினும், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எல்லை மீறி போகும் போது பொறுமை இழந்து அவர்களை அடிப்பது குறித்து எண்ணுவதுண்டு.

அடிப்பதால் குழந்தைகளுக்குள் ஏற்படும் மாற்றங்கள்:

வயது வந்தவர்களுக்கே, தன்னை ஒருவர் பலரது முன்னிலையில் அல்லது தனியாக வைத்து அரைந்தால், அது அவமானத்திற்குறிய விஷயமாக தோன்றும். அப்படியிருக்கையில், குழந்தைகளின் மனதில் அடிப்பது எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பெற்றோர்கள் சற்று சிந்திக்க வேண்டும். பலர், குழந்தைகள் தவறு செய்கையில் அவர்களை அடிப்பது, ஒரு பாடமாக இருக்கும் என்று நினைக்கின்றனர். காலம் கடந்த பின்புதான் அது ஒரு தவறான எடுத்துக்காட்டு என்பதையே அவர்கள் புரிந்து கொள்கின்றனர். இப்படி குழந்தைகளை அடிப்பதால் அவர்களுக்குள் உணர்வு ரீதியாக பல விதமான மாற்றங்கள் ஏற்படும், உடல் அளவில் மட்டுமன்றி மனதளவிலும் அவர்கள் காயப்படுவர்.

1.மனதில் உறுதி வேண்டும்:

பெற்றோர்கள், தங்களது பொறுமையை இழந்து விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதி கொள்ள வேண்டும். குழந்தைகள், ஒழுக்கமின்றி நடக்கும் போதுதான் பெற்றோர்கள் தங்களது பொறுமையை இழக்க கூடும். இதை தவிர்க்க முதலிலேயே என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனபதை குழந்தைகளுக்கு அவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்துரைக்க வேண்டும். சிறு வயதிலேயே அவர்களுக்கு எது சரி எது தவறு என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் தவறாக நடந்து கொண்டால் பின்பு அவர்கள் எந்த மாதிரியான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எடுத்துரைத்தால் தவறு செய்வதற்கு முன்பு யோசிப்பர். இதனால், பெற்றோர்கள் தாங்கள் கோபமடையாமல் தடுக்கலாம்.

2.அந்த இடத்தில் இருந்து விலகி விடுங்கள்..

குழந்தைகள் உண்மையாகவே பல சமயங்களில் பெற்றோரின் பொறுமையை சோதிப்பர். வீட்டை குப்பையாக்குவது, வெளியில் கிளம்பும் சமயங்களில் கோபம் கொள்ள வைக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை இதில் அடங்கும். அதிலும் ஒரு குழந்தையுடன் இன்னொரு குழந்தை சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அப்படி உங்கள் பொறுமையை உங்கள் குழந்தை மிகவும் சோதித்தால், உங்களுக்கு உங்கள் குழந்தையை அடிக்க வேண்டும் என்று தோன்றினால் உடனடியாக அந்த இடத்தில் இருந்து உங்களை நீங்கள் விலக்கிக்கொள்வது நல்லது. தனியாக சென்று நீங்கள் மூச்சுப்பயிற்சி செய்யலாம். நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால், உங்கள் குழந்தையை அடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை யோசித்து பார்க்கலாம். இதனால் உங்களது கோபம் குறையும்.

3.எல்லைகளை விதிக்க வேண்டும்..

பெற்றோர்களுக்கு கோபம் வரவழைக்கும் விஷயங்களில் ஒன்று, குழந்தைகள் எல்லை மீறுவது. அவர்கள் எல்லையை மீறுவதற்கு முன்பு, பெற்றோர்கள் எல்லைகளை விதிக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஆபத்தான பொருட்கள் நிறைந்த இடத்தில் குழந்தைகளை வரக்கூடாது என்பதை முன்கூட்டியே கூறி விட வேண்டும். அவர்கள் செய்யக்கூடிய, செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்பதை அவ்வப்போது தெரியப்படுத்தி விட்டால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

4.பாசிடிவாக பேச வேண்டும்:

அடிப்பது எந்த அளவிற்கு குழந்தைகளுக்கு மனதளவில் காயத்தை ஏற்படுத்துமோ, அதே அளவு தாக்கத்தைதான் குரலை உயர்த்தி கத்துவதும் ஏற்படுத்தும். அனதால், முடிந்த அளவு குழந்தைகளிடம் குரலை உயர்த்தி பேசுவதை தவிர்க்கவும். இதற்கு மாறாக, உங்கள் குழந்தையின் செயலால் நீங்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறீர்கள் என்பதை தன்மையான குரலில் அவர்களுக்கு புரியும் படி தெரியப்படுத்தவும். இதனால், அவர்கள் கண்டிப்பாக அடுத்த முறை அவர்களின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.

No comments