Breaking News

ரூ.5 லட்சத்துக்கு மேல் பிரீமியமா? இனி வழியில்லை, வரி கட்டணும்

ஓராண்டில், ஒரு காப்பீட்டு பாலிசிக்கு, 5 லட்ச ரூபாய்க்கு மேல் பிரீமியம் செலுத்தப்பட்டு இருந்தால், அதிலிருந்து கிடைக்கும் முதிர்வு தொகைக்கு வரி விலக்கு வழங்கப்பட மாட்டாது என்று, நேரடி வரி விதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

வருமான வரி பதினாறாவது திருத்தச் சட்டம் 2023 வாயிலாக, இந்தத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023, ஏப்ரல் 1க்கு பின், வழங்கப்படும் அனைத்து புதிய காப்பீட்டு பாலிசி களுக்கும் இந்த திருத்தம் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுநாள் வரை, ஒரு பாலிசிக்கு, ஓராண்டில், ஒட்டுமொத்தமாக 5 லட்ச ரூபாய்க்கு மேல் பிரீமியம் செலுத்தப்பட்டு இருந்தாலும், இறுதியில் கிடைக்கும் முதிர்வுத் தொகைக்கு, வருமான வரிப்பிரிவு 10 - 10டி கீழ் வரிச்சலுகை வழங்கப்பட்டது. தற்போது அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.புதிய திருத்தத்தின்படி, முதிர்வுத் தொகை, அந்த நபரது வருவாயோடு சேர்க்கப்பட்டு, அதற்குரிய வரிப்பிடித்தம் செய்யப்படும். இந்த திருத்தம், ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும்.

இது 'யூலிப்' திட்டங்களுக்கு பொருந்தாது. வருமான வரி ஏய்ப்புக்கு பயன்பட்டு வந்த இந்த ஓட்டை தற்போது அடைக்கப்பட்டதாக, வரித்துறையினர் கருதுகின்றனர். கூடுதலாக பிரீமியம் செலுத்திவிட்டு, முதிர்வுத் தொகையில் வரி விலக்கு பெறுவது என்பது, மறைமுகமாக வரியைக் கட்டாமல் தவிர்ப்பதற்கான வழிமுறையாக இருந்தது. அது இப்போது சரி செய்யப்பட்டுள்ளது.பாலிசி நடைமுறையில் இருக்கும் போது, பாலிசிதாரர் மரணமடைந்துவிட்டால், அப்போது கிடைக்கும் தொகைக்கு வழங்கப்படும் வரிவிலக்கில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை.

No comments