Breaking News

இனி படிக்கும்போது கண்ணாடி அணிய தேவையில்லை... வந்தாச்சு புதிய மருந்து!

 

ரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, ரீடிங் கிளாஸ் (Reading Glasses) தேவையை குறைப்பதற்கான இந்தியாவின் முதல் கண் சொட்டு மருந்திற்கு மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்டோட் ஃபார்மாசூட்டிகல்ஸ் (Entod Pharmaceuticals), பைலோகார்பைனைப் ( pilocarpine) பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட "ப்ரெஸ்வியூ" கண் சொட்டு மருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மருந்து, தொலைவில் உள்ள பொருட்களை நெருக்கமாகப் பார்க்க உதவுகிறது.

Entod Pharmaceuticals என்பது, கண் மருத்துவம், ENT மற்றும் தோல் மருத்துவம் மருந்துகளில் நிபுணத்துவம் பெற்றதுடன், 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்கிறது.

என்டோட் பார்மாசூட்டிகல்ஸின் தலைமை செயல் அதிகாரி (CEO) நிகில் கே மசுர்கர் நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மருந்தின் ஒரு துளி 15 நிமிடங்களில் வேலை செய்யத் தொடங்கும். அதன் தாக்கம் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு இருக்கும். அதேபோல், முதல் சொட்டு ஊற்றிய மூன்று முதல் ஆறு மணி நேரத்திற்குள் இரண்டாவது சொட்டு ஊற்றினால் அதன் தாக்கும் இன்னும் அதிகமாக இருக்கும்.

மேலும், மங்கலான, அருகே உள்ள பொருட்களை பார்க்க ரீடிங் கிளாஸ்கள், காண்டாக்ட் லென்ஸ்கள் அல்லது சில அறுவை சிகிச்சைகளை தவிர மருந்து அடிப்படையிலான தீர்வு எதுவும் இல்லாமல் இருந்தது என்றார். ஆனால் தற்போது அதற்கு ஒரு தீர்வு கிடைத்து இருக்கிறது.

இந்த மருந்தை யார் வாங்கலாம்?

அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து, மருந்துக் கடைகளில் இந்த மருந்து கிடைக்கும். மருந்துச் சீட்டு அடிப்படையில் ரூ.350 விலையில் இந்த சொட்டு மருந்து கிடைக்கும். இந்த மருந்து லேசானது முதல் இடைநிலை ப்ரெஸ்பியோபியா உள்ள 40 முதல் 55 வயதுடையவர்கள் பயன்படுத்தலாம். மேலும், இந்திய மக்களின் மரபணு அடிப்படையில் இந்த மருந்து உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்களின் மருந்துச் சீட்டுகள் இருந்தால் மட்டுமே இந்த மருந்து தரப்படும். மருந்தின் பயன்பாடு குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க களப் பணிகளை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது என்றார்.

250க்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் இந்தியா முழுவதும் பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. முடிவுகள் மற்றும் தரவு ஒழுங்குமுறை நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நிபுணர் குழு ஆய்வுக்கு ஒப்புதல் அளித்து, மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்றார்.

82% பேருக்கு பக்க விளைவுகள் இல்லை:

ஆய்வில், 274 பேரில் 82 சதவீதம் பேருக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. மீதமுள்ளவர்களுக்கு கண் எரிச்சல், சிவத்தல், மங்கலான பார்வை மற்றும் தலைவலி உள்ளிட்ட சிறிய தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டது. அது இரண்டு நாட்களில் சீராகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஆய்வின் முடிவுகள் இன்னும் மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில் வெளியிடப்படவில்லை என்றாலும், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல பெரிய கண் பராமரிப்பு மையங்களில் சந்தைப்படுத்தலுக்குப் பிந்தைய கண்காணிப்பை நடத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

No comments