Breaking News

இலங்கை மக்களுக்கு ஒருநாள் சம்பளம்.. தமிழக அரசு ஊழியர்கள் முடிவு..!

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருந்து உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது. மேலும் பொதுமக்களும், தன்னார்வலர்களும் உதவ வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில், இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முன் வந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து இலங்கை நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என அச்சங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் வழங்க வேண்டும்.

அதற்காக, தங்களின் பங்களிப்பினை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில், இலங்கை மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க இசைவு தெரிவித்து உள்ளோம்.

எனவே, தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர், ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை இந்த மாதம் சம்பளத்தில் பிடித்துக் கொள்வதற்கான அரசாணை பிறப்பித்து உத்தரவிடுமாறு முதல்வரை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments