Breaking News

"முதலில் வருவோருக்கு முதலில் சேவை".. தமிழ்நாட்டில் பட்டாக்கள் மாற்றம்! வருவாய்த்துறை திடீர் விளக்கம்

 

உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கு, ஒரே வரிசை எண் வழங்கப்படவில்லை என்று வருவாய் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பட்டாக்களை பொதுமக்கள் எளிதாக பெறும்வண்ணம் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.. காரணம், நிலம் வாங்கும் உரிமையாளர்கள், அந்த இடத்திற்கு பட்டா வாங்குவதற்கு படாதபாடு படவேண்டியிருக்கிறது.. இதற்காகவே கால நேரம் வீணாகிவிடுகிறது.

எனவே, பத்திரப்பதிவு துறையில் ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது... அதேபோல, தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டமும், கடந்த 15ம் தேதி முதல் தமிழகத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு முடிந்த ஒரு வாரத்திற்குள்ளேயே சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பட்டா பெயர் மாற்றம்: இதன் மூலம் உட்பிரிவு செய்யும் தேவை இல்லாத நில கிரையங்களில் தானியங்கி முறையில் சில மணி நேரத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யலாம். அதேபோல, பட்டா பெயர் மாற்றத்தை எளிமையாக்க, "முதலில் வருவோருக்கு முதலில் சேவை" என்ற திட்டத்தை, வருவாய் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில், நேரடி பட்டா மற்றும் உட்பிரிவு பட்டா ஆகிய இரண்டுக்கும் ஒரே தரவரிசை அளிக்கப்படுகிறது. இதனால், பட்டா பெயர் மாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் கிளம்பின.. இதையடுத்து, தமிழக அரசு விளக்கம் ஒன்றினை தந்துள்ளது.

2 வகைகள்: அதில், "நில உடைமை ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு "தமிழ்நிலம்" எனும் இணையம் மூலமாக இணையவழி பட்டா மாறுதல் ஆணைகள் வருவாய்த்துறை அலுவலர்களால் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ அல்லது இணையவழியில் https://eservices.tn.gov.in என்ற இணைய முகவரியில் பட்டா மாற்றம் கோரி விண்ணப்பம் செய்து பட்டா மாறுதல் உத்தரவுகளை பெற்று வருகின்றனர். இதில் பட்டா மாறுதல் கோரும் மனுவின் மீதான நடவடிக்கையானது குறுஞ்செய்தி மூலம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

பட்டா மாற்றம்: பட்டா மாற்றம் கோரும் மனுக்கள் இரண்டு வகைப்படும். ஒன்று உட்பிரிவுடன் கூடிய பட்டாமாற்றம், மற்றொன்று உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம். இதன்படி, உட்பிரிவுடன் கூடிய பட்டாமாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கும், உட்பிரிவு இல்லாத நேரடிப்பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கும் தனித்தனியே வரிசை எண் வழங்கப்பட்டு அவற்றின்மீது உரிய கால அளவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்றது முதல், மூன்று ஆண்டுகளில் இணையவழியில் 81.76 லட்சம் பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு இச்சேவைகளை கூடுதலான வெளிப்படைத் தன்மையுடன் விரைந்து வழங்க ஏதுவாக விண்ணப்பங்களைப் பெற்ற வரிசைப்படி தீர்வு செய்யும் நடைமுறை 2024ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி முதல் உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

உத்தரவுகள்: உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களில் "முதலில் வருவோருக்கு முதலில் சேவை" என்ற நடைமுறையில் ஜூன் 4 முதல் 16ம் தேதி வரை 15,484 பட்டா மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன.

மேலும், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்ற விண்ணப்பங்களில் 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. எனவே, 2 வகையான விண்ணப்பங்களுக்கும் ஒரே வரிசை எண் வழங்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும்" என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

No comments