Breaking News

கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்: அனைத்தும் இங்கு இலவசம்!

தமிழ்நாடு -ஆந்திர எல்லையில் உள்ள திராவிட பல்கலைக் கழகத்தில் கல்வி, உணவு, விடுதி கட்டணம் ஆகியவை இலவசமாக கொடுக்கப்படும் போதும் மாணவர்கள் சேர முன்வராததால் தமிழ்த்துறை மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் தமிழ்த்துறையில் சேர வேண்டும் என்று பேராசியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியில் திராவிட பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு கடந்த 2005ஆம் ஆண்டு முதல் எம்ஏ., எம்பில்., பிஎச்டி., ஆகிய முதுநிலை படிப்பிற்கான தமிழ்த் துறை செயல்பட்டு வருகிறது.
இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், உணவு, தங்கும் விடுதி கட்டணம் அனைத்தும் தமிழக அரசு சார்பில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் வழங்கப்படுகிறது. எனவே, இங்கு வரக்கூடிய மாணவர்கள் இலவசமாக தங்கி கல்வி கற்கலாம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த பல்கலைக் கழகத்தில் பயில வருவதற்கான மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது.

இதேநிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் இந்த பல்கலைக் கழகத்தில் தமிழ் துறையை மூட கூடிய சூழ்நிலை ஏற்படும் என பேராசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ் துறை பேராசிரியர் மாரியப்பன், ''தமிழ்நாடு -ஆந்திர எல்லையில் கிருஷ்ணகிரி, பர்கூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய நகரங்களுக்கு அருகில் திராவிடப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

தமிழ் துறையில் முதுநிலை படிப்பு படிப்பதற்கு அரசு சார்பில் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் வர வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் மிகவும் கவலைக்குரிய நிலைக்கு கொண்டு செல்லக் கூடும். ஆகையால், தமிழக அரசு இந்த பல்கலைக்கழகத்தில் முதுநிலை படித்து பட்டம் பெறுவதற்கு மாணவர்களை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 28ஆம்தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்,'' என்றார்

No comments