Breaking News

இன்றைய சிந்தனை(14.3.2022)-‘’செக்கு மாடு போல’’..அருமையான வரிகள் கண்டிப்பாக படியிங்கள்:

பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம்.

நாம் சாதிக்கக் கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய் விடுகிறது.

வாழ்க்கையில் எப்போதுமே திருப்புமுனைகள் அவசியம். அவை இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இல்லாமல் போய் விடும்.

தடைகள் வர வேண்டும். அவற்றை மீறிக் கடந்து செல்ல வேண்டும். வெல்ல வேண்டும்.
இல்லாவிட்டால் செக்குமாடு போல ஒரே இடத்தில் உழன்று கொண்டிருப்போம்.

மாற்று வழி –வேறு மார்க்கம் பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. ஒரே இடத்தில், மிகச் சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம்.

ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, மனநிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்து விடுகிறது.

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்குக் கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ணகிளிக் குஞ்சுகளைப் பரிசளித்து விட்டுச் சென்றார்.

பஞ்சவர்ணக் கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளை இட்டான்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்து கொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.

“அரசே.இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்கக் கற்றுக் கொண்டு விட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.

உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்துப் பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளையிட்டான்.

அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்து விட்டு, “இந்தப் பறவையிடம் எந்த குறையும் இல்லை. உடலில் ஊனம் இல்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.

உடனே அரசன் தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது, இந்தக் கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்க வேண்டும்” என்று உத்தரவு இட்டான்..

சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்த்தான்  கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்து இருந்தது. நகரவே இல்லை. மன்னனுக்கு என்னவோ போல இருந்தது.

“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்தக் குடிமக்கள் எவரையேணும் அணுகி இது பற்றிக் கேட்க வேண்டும்.

அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்து இருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்குப் போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.

அடுத்தநாள் காலை கண்விழிக்கும் போது, அந்தப் பஞ்சவர்ணக் கிளி மரத்தைச் சுற்றி அங்கும் இங்கும் பறந்துக் கொண்டு இருப்பதை பார்த்தான். அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள் என்றான்.

அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார். எல்லாரும் முயற்சி செய்து தோற்று விட்ட நிலையில் நீ மட்டும் கிளியை எப்படி பறக்கச் செய்தாய்?” என அரசன் கேட்டான்.

அரசன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான செயல் அரசே. மரத்தில் ஏறி அந்தப் பறவை உட்கார்ந்து இருந்த கிளையை நான் வெட்டி விட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.

ஆம்.,நண்பர்களே..,

நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக் கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக் கொள்வோம். .....

No comments