Breaking News

வருமான வரியை சேமிக்க உதவும் FD-க்களில் முதலீடு செய்ய வேண்டுமா?


2023-24 நிதியாண்டுக்கான வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய மார்ச் 31, 2024 வரை மட்டுமே நேரம் உள்ளது.
நீங்கள் உங்கள் வரியை சேமிக்க நினைத்தால் இந்த நேரம் உங்களது வரி திட்டமிடலை துவக்கி இருக்க வேண்டும். இல்லை என்றாலும் பரவாயில்லை, உங்களது வரியை சேமிக்க உதவும் திட்டங்களில் முதலீடு செய்வதற்காக இன்னும் சில வாரங்கள் கையில் இருக்கின்றன.

2023-24 நிதியாண்டிற்கான வரி சேமிப்பு முதலீடுகளை செய்ய கடைசி தேதி வரும் மார்ச் 31-ஆக இருக்கும் நிலையில் ஏற்கனவே பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் முதலீட்டு சான்றுகளைச் சமர்ப்பிக்க ஊழியர்களிடம் கேட்க துவங்கி உள்ளன. நீங்கள் டேக்ஸ் ஃப்ரீ முதலீட்டு திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் உங்களுக்கான திட்டங்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), ELSS, பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) அல்லது லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம் என பல ஆப்ஷன்கள் உள்ளன. நீங்கள் பெரிதும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை அதே நேரம் lower tax brackets-ன் கீழ் நீங்கள் வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் FD திட்டங்கள் உதவியாக இருக்கும். அந்த வகையில் டெபாசிட்கள் மற்றும் நல்ல வட்டி விகிதங்கள் அடிப்படையில் ரூ.1 கோடிக்கும் குறைவான FD முதலீடுகளுக்கு 7 சதவீதம் வரை வட்டி வழங்கும் சில பெரிய வங்கிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்களை (டேக்ஸ்-சேவிங் டெபாசிட்) பொறுத்த வரை தனியார் வங்கிகளில் ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்டவை 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. நீங்கள் இந்த வங்கிகளின் வரி சேமிப்பு FD-க்களில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் ஐந்தாண்டுகளில் உங்களின் பணம் ரூ.2.12 லட்சமாக அதிகரிக்கும்.

பொதுத்துறை வங்கிகளில் வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு கனரா வங்கி சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வங்கியானது வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 6.7 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. நீங்கள் இந்த வங்கியின் டேக்ஸ் சேவிங் டெபாசிட் திட்டத்தில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் ஐந்தாண்டுகளில் அது ரூ.2.09 லட்சமாக உயரும். அதே நேரம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BOB) உள்ளிட்ட முன்னணி பொதுத்துறை வங்கிகள் வரி சேமிப்பு டெபாசிட்டுகளில் தங்களிடம் முதலீடு செய்வோருக்கு 6.5 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் வரி சேமிப்பு டெபாசிட்களுக்கு 6.5 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த வங்கிகளின் வரி சேமிப்பு டெபாசிட்களில் நீங்கள் தற்போது ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் ஐந்தாண்டுகளில் ரூ.2.07 லட்சமாக அதிகரிக்கும். வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு இந்தியன் வங்கியானது 6.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இங்கு நீங்கள் முதலீடு செய்யும் ரூ.1.5 லட்சம், அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் ரூ.2.05 லட்சமாக அதிகரிக்கும். பேங்க் ஆஃப் இந்தியா வங்கியானது 6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த வங்கியின் வரி சேமிப்பு டெபாசிட் திட்டத்தில் ரூ.1.5 லட்சம் நீங்கள் முதலீடு செய்தால் ஐந்தாண்டுகளில் ரூ.2.02 லட்சமாக அதிகரிக்கும்.

அதே போல ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (DICGC) ரூ. 5 லட்சம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

No comments