Breaking News

புற்றுநோய் குறித்த இந்த விஷயங்கள் தெரியுமா? எச்சரிக்கை விடுக்கும் அறிகுறிகள்!!!

புற்றுநோய் என்ற வார்த்தை பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் ஒரு அபாயகரமான நோயாகும். உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் பாதிக்கும் புற்றுநோய் என்பது ஒரு தொற்றுநோய் அல்ல.

நமது உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இவை வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. ஆனால், ஏதாவது காரணத்தால் இந்த செயல்பாடுகள் மாறும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழும் நிலையில், உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன.

ஆனால், உடலில் உருவாகும் அனைத்துக் கட்டிகளுமே புற்றுநோய் கட்டிகள் அல்ல. பொதுவாக புற்றுநோய் அறிகுறிகள் தொடர்பாக பலருக்கும் தெளிவாகத் தெரிவதில்லை. இந்தக் கட்டுரையில், புற்றுநோய்க்கான அறிகுறிகளைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய் மற்றும் ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளில் புற்றுநோய் அதிக அளவில் வருகிறது. அதுவே, பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து, அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை அழிக்கின்றன. அதன்பிறகு, அவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் பிற பகுதிகளுக்கும் பரவி, அங்கும் சேதத்தை ஏற்படுத்தும்போது, உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்படுகிறது.

புற்றுநோய்

புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. புகையிலை உபயோகித்தல், உணவுமுறைகள், சூரியனின் கதிர்வீச்சு, மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை, வாழ்க்கைமுறை ஆகியவை புற்றுநோய் உருவாகக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மரபணு மாற்றங்கள் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வரலாம் என்பதால், குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்திருந்தாலோ அல்லது தற்போது பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, குடும்பத்தினர் அனைவரும் புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். அதேபோல, எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்ற சில வைரஸ்களும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.

உடல் எடை இழப்பு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் எடை இழப்பு என்பது பொதுவான காரணியாக இருக்கிறது.

அடிக்கடி காய்ச்சல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் வருவது மிகவும் பொதுவானது. புற்றுநோய் பரவ ஆரம்பித்தப் பிறகு காய்ச்சல் வருவது தொடர்ந்து நடைபெறும். புற்றுநோய் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பதால் அடிக்கடி காய்ச்சல் வரும்

உடல் சோர்வு
தீவிரமான உடல் சோர்வும் புற்றுநோயின் முக்கியமான அறிகுறியாகும். பெருங்குடல் அல்லது வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட்டால் இரத்த இழப்பை ஏற்படுத்தும் இதனாலும் உடல் சோர்வு ஏற்படலாம்.

சருமத்தில் மாற்றங்கள்
புற்றுநோய்களில் சரும புற்றுநோயைத் தவிர, வேறு சில புற்றுநோய்களும் தோலில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

மலம் கழிப்பதில் மாற்றங்கள்
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவை அடிக்கடி ஏற்படுவது, சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீரில் இரத்தம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

வாய்ப் புண்
வாயில் அடிக்கடி புண் ஏற்படுவது, வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதிலும் வாயில் ஏற்பட்ட புண், நீண்ட காலமாக ஆறாவிட்டால் பரிசோதிக்கப்பட வேண்டும்.

இரத்தப்போக்கு
புற்றுநோயுடன் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலைகளில் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படலாம். இருமும் போது இரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மலத்தில் மிகவும் கருமையான நிறத்தில் இரத்தம் வருவது தொடர்ந்தால், அது பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

கட்டிகள்
உடலில் தடிப்பு அல்லது கட்டிகள் தோன்றுவது, அதிலும் மார்பகங்கள், விரை, நிணநீர் சுரப்பிகளில் ஏற்படுவது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

செரிமானக் கோளாறுகள்
தொடர்ந்து செரிமானத்தில் பிரச்சனை ஏற்பட்டாலோ உணவு உண்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அது உணவுக்குழாய், வயிறு அல்லது தொண்டை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இருமல் அல்லது தொண்டை கரகரப்பு
தொடர்ந்து இருமல் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மூன்று வாரங்களுக்கு மேல் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால் அது குரல்வளை அல்லது தைராய்டு சுரப்பிப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

No comments