Breaking News

ஆயிரம்சந்தேகங்கள்: வீட்டுக் கடனை 'படுகுழி' என நீங்கள் வர்ணிக்கலாமா?

 

ங்கள் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடத்த இருக்கின்றனர். அவ்விழாவில் வங்கி மற்றும் நிதி தொடர்பான தமிழ் மொழி புத்தகங்கள் வாங்க இருக்கிறேன்.
எத்தகைய புத்தகங்கள் வாங்கலாம்?எஸ்.ராஜன், ராமநாதபுரம்.நிதி தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படித்த பின்னர், முதலீட்டில் இறங்குவதற்கு முடிவு செய்துள்ள உங்களுக்குப் பாராட்டுகள். இந்தத் துறையில் ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும். எனக்குத் தெரிந்து, சொக்கலிங்கம் பழனியப்பன், சோம.வள்ளியப்பன், வ.நாகப்பன், புகழேந்தி, ஜி.எஸ்.சிவகுமார். நா.கோபாலகிருஷ்ணன், சி.முருகேஷ் பாபு, ராம் வசந்த், பாபி ஸ்ரீனிவாசன், டாக்டர் ஆர்.கார்த்திகேயன், சிவகாசி மணிகண்டன், சி.சரவணன் உள்ளிட்டோர் நிதி, முதலீடு தொடர்பாக தமிழில் எழுதக்கூடியவர்கள்.

இவர்களுடைய புத்தகங்கள், பல முன்னணி தமிழ் பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன. நிதி, முதலீடு தொடர்பாக ஏராளமான ஆங்கில நுால்களும் உள்ளன. அவற்றையும் வாசிக்க முயற்சி செய்யுங்கள். அவையும் உங்கள் புரிதலை மேலும் விரிவு செய்யும்.

நான் 80 வயதான ஓய்வுபெற்ற அரசு ஆசிரியர். இந்த ஆண்டுக்கான வருமான வரி படிவத்தை கருவூலத்தில் சமர்ப்பிக்க, எந்த எண் படிவத்தை நான் ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும்?து.திரவியம், மதுரை மாவட்டம்.நீங்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டியிருக்காது. ஒருவேளை உங்களது ஓய்வூதியத்தையும், முதலீட்டுக்கான வட்டியையும் ஒரே வங்கியில் இருந்து தான் பெறுகிறீர்கள் என்றால், உங்கள் வங்கியிலேயே டி.டி.எஸ்., பிடித்தம் ஏதேனும் இருந்தால், பிடிக்கச் சொல்லி, சமன் செய்துகொள்ளலாம். தனியே ரிட்டர்ன் தாக்கல் செய்யத் தேவையில்லை.

வீட்டு வாடகை, வேறு முதலீடுகளில் இருந்து வருவாய் இருக்குமானால், வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் ஐ.டி.ஆர்., 1 வழியாகவே ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம். நான் பங்குச் சந்தை வர்த்தகம் பற்றி கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அடிப்படை பயிற்சியை எங்கே பெறுவது?எஸ்.மணிகண்டன், தாம்பரம், சென்னை.தேசிய பங்குச் சந்தையை விட வேறு யாராலும் சொல்லிக் கொடுக்க முடியாது. என்.எஸ்.சி., வலைதளத்தில், 'லேர்ன்' என்றொரு சுட்டி இருக்கிறது.

அதில், அத்தனை விதமான பாடத் திட்டங்களும் கொட்டிக் கிடக்கின்றன. பங்குச் சந்தை சார்ந்த அத்தனை விதமான உத்திகளையும் நீங்களாகவே கற்றுக் கொள்வதற்கு ஏற்ப பல்வேறு விதமான கோர்ஸ்கள் உள்ளன. உங்கள் நேரத்துக்கும் வசதிக்கும் ஏற்ப, வர்த்தகம் தொடர்பான வகுப்புகளில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம். சமீபத்தில் தாங்கள் வீட்டுக் கடனை படுகுழி என்று வர்ணித்து இருப்பது சற்றே அதிர்ச்சி அளிக்கிறது.

காரணம், என் சொந்த அனுபவம். நாங்கள் ஹைதராபாதில் 2002ல், 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வங்கிக் கடன் பெற்று வாங்கினோம். பத்து ஆண்டுகளில் கடனை அடைத்து விட்டோம். இன்று அந்த வீட்டின் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு மேல்.

வாடகை வீட்டில் இருந்திருந்தால், அன்றைய வாடகை 1,200 முதல், இன்றைய வாடகை 30,000 ரூபாய் வரை என எத்தனை லட்சம் கையை விட்டு போயிருக்கும்! வீட்டுக் கடன் மீது எதிர்மறை விமர்சனம் செய்வதை விட, இது போன்ற நேர்மறை கருத்தை தெரிவித்திருந்தால் பயனுடையதாக இருக்கும்.சு.அருள் நாராயணன், ஹைதராபாத், தெலுங்கானா.எதிர்மறையாக பேசுவது என் நோக்கமல்ல. முதலீட்டின் நோக்கம் அதிக வருவாயையும் பலனையும் ஈட்டுவதாகும். உங்கள் கணக்கையே எடுத்துக் கொள்வோம்.

2002ல் 8 லட்சம் ரூபாயாக இருந்த வீட்டின் மதிப்பு, 2024ல் 1 கோடி ரூபாய் என்கிறீர்கள். மறுவிற்பனை செய்யப் போகும்போது தான் உண்மை நிலை தெரியும். இருக்கட்டும். உங்கள் கற்பனையை நான் கலைக்க விரும்பவில்லை.

இதே தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தீர்கள் என்றால், தற்போது அந்தப் பணம் குறைந்தபட்சம் 4 கோடி ரூபாயேனும் ஆகியிருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பணம் இரட்டிப்பாவது பங்குச் சந்தையில் தான் சாத்தியம். இதில் எது சிறப்பான முதலீடு என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். படுகுழி என்று நான் சொன்னதற்கு ஒரே ஒரு காரணம் தான்.

15 அல்லது 20 ஆண்டுகள் இ.எம்.ஐ., என்ற பிசாசுக்கு பயந்து, சொந்த வாழ்க்கையில் அத்தனை சுகங்களையும், சவுகரியங்களையும் தியாகம் செய்துவிட்டு, நரை, திரை, மூப்பில் திண்டாடுவோர் ஏராளம். கரைந்து போன இளமை திரும்பி வருமா என்ன? ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு என அனைத்து அம்சங்களும் உள்ளடங்கிய குறைவான பிரீமியம் தொகையில் இணையும் காப்பீட்டு திட்டம் உள்ளதா?செல்வக்கோ பெருமாள்.செ, காந்திநகர் மூன்றாம் வீதி, காஞ்சிபுரம். வரப் போகிறது.

2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற தொலைநோக்குத் திட்டத்தோடு, இந்திய காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் 'பீமா டிரினிட்டி' என்ற திட்டத்தை அடுத்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் அறிமுகம் செய்யப் போகிறது. இதில், 'பீமா விஸ்தார்' என்ற ஒற்றை பாலிசியில், மருத்துவம், ஆயுள், சொத்து, விபத்து காப்பீடுகள் ஒருங்கிணைந்து வழங்கப்படும். இதற்கான பின்னணி தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் சேருபவர்களுக்கு, கிளெய்ம் உள்ளிட்டவை மிகவும் சுலபமாக இருக்கப் போகிறது.

No comments