Breaking News

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: 11வது முறையில் தேர்ச்சிபெற்ற மாணவன்... மேளதாளத்தோடு வரவேற்ற ஊர்மக்கள்!

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி… வெற்றியை எதிர்நோக்கும் நபர்கள் ஒரு முறை தோல்வியடைந்துவிட்டாலே உடைந்துவிடுவார்கள்...

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 முறை தோல்வியுற்று, 11-வது முறை மாணவர் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

மகாராஷ்டிராவின் பீட் நகரைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணா நாம்தேவ் முண்டே. இவர் பார்லி தாலுகாவில் உள்ள ரத்னேஷ்வர் பள்ளியில் படித்து வந்துள்ளார். 2018-ல் நடந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்றுள்ளார்.

ஆனால், சற்றும் மனம் தளராத மாணவன், தொடர்ச்சியாகத் தேர்வுகளை எழுத ஆரம்பித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 10 முறை தேர்வெழுதி தேர்ச்சிபெற முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில் 11-வது முறை தேர்வெழுதிவிட்டு ரிசல்ட்டிற்காக காத்திருந்தவர்களுக்கு திங்கட்கிழமை வெளியான மகாராஷ்டிரா பொதுத் தேர்வு முடிவுகளில் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இம்முறை அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

தேர்ச்சி பெற்ற செய்தியைக் கேட்டதும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மகனை மேளதாளங்கள் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். இதைக் கண்ட கிராம மக்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டு அம்மாணவரை தோளில் தூக்கிச் சென்றுள்ளனர்.

தொடர்ச்சியாக 10 முறை தோல்வியால் சரிந்து, 11-வது முறை எழுந்து நிற்கும் மனவுறுதியோடு மாணவன் வெற்றி பெற்ற சம்பவம் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

No comments