Breaking News

இதுதான் ஸ்டெப்ஸ்.. தமிழ்நாட்டில் இனி வாட்ஸ் ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்.. எப்படி தெரியுமா?

 


தமிழ்நாட்டில் வாட்ஸ்ஆப் மூலம் மின்கட்டணம் எப்படி செலுத்துவது என்று இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் வாட்ஸ் ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது மின்சார கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது.

1. பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

2. மின் கட்டணம் 500 தாண்டும் பட்சத்தில் தானாக பதிவு செய்யப்பட்ட போன் எண்களின் வாட்ஸ் ஆப்களுக்கு பில் சென்றுவிடும்.

3. அப்படி இல்லாத பட்சத்தில் வாட்ஸ்ஆப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை ✅ குறியீடு இருக்கும்.

4. எண் 94987 94987 என்பதை உறுதி செய்து அதில் கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் என்ற ஆப்ஷன் வரும். அதில் கிளிக் செய்தால் நம்முடைய கட்டணம் எவ்வளவு என்பதை காட்டும்.

இந்த பில் கட்டணத்தில் க்யூ ஆர் கோடு இருக்கும். இந்த க்யூ ஆர் கோடை கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ சாதனங்களில் ஸ்கேன் செய்தால் போதும் தானாக அதன் மூலம் பணம் செலுத்திவிட முடியும்.

யாருக்கு பொருந்தும்: இதில் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்த முடியும். தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.

இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது.

புதிய முறை: இது போக மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு (UG) வசூலிக்கப்படும் அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர்களிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி புகார்கள் எழுந்ததையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உடனடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் கணக்கில் அதைத் திருப்பிச் செலுத்தி அவர்களின் அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்துகொள்ளவும் என்று உத்தரவிட்டுள்ளது மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் மின்கட்டணம் குறைவாகவும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருளானது உடனடியாக திருத்தப்பட வேண்டும், மேலும் தற்போதுள்ள ஏற்பாடுகளுடன் மேம்பாட்டுக் கட்டணங்களை மேலும் வசூலிக்க அனுமதிக்கப்படாது. இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் மேம்பாட்டுக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்கள் அல்லது நுகர்வோருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது முன்கூட்டியே நுகர்வுக் கட்டணமாகக் கருதி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இனிமேல் மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கான (UG) அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இபி பில்: இது போக சென்னை மட்டுமின்றி அடுத்த சில வாரங்களில் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்கட்டண முறையில் மாற்றம் ஏற்படும் என்று தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் மின் கட்டண முறையில் முக்கியமான சில மாற்றங்களை வரும் நாட்களில் நாம் எதிர்பார்க்கலாம் என்று மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments