Breaking News

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. குவிந்த விண்ணப்பங்கள்.. கடந்த ஆண்டை விட 45% அதிகம்.. என்ன காரணம்?

 


கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் மத்தியில் ஆண்டுக்கு ஆண்டு ஆர்வம் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டை விட 45 சதவிகிதம் அதிகமாக இந்த ஆண்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.) 2009 - ஆம் ஆண்டு மத்திய அரசால் ஆண்டு கொண்டு வரப்பட்டது. தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி கற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவ - மாணவியரின் கல்வி கட்டணத்தில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்து கொள்ளும். தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த நிலையில்தான் இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. வழக்கத்தை விட இந்த ஆண்டு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருந்தனர். 87 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், 1 லட்சத்து 74 ஆயிரத்து 546 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதனால் குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. தேர்வு செய்யபட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பெற்றோர்கள் ஜூன் 03 ஆம் தேதிக்குள் அட்மிஷன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆர்டி இ - கீழ் மாணவர்களை சேர்க்க வந்த விண்ணப்பம் 45 சதவிகிதம் அதிகம் ஆகும்.

கடந்த கல்வி ஆண்டில், 1.1 லட்சம் விண்ணப்பங்கள் நிலையில் இந்த ஆண்டு 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தமிழக அரசு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்ட சூழலிலும், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களின் ஆர்வம் குறையாமல் இருப்பதையே விண்ணப்பங்கள் அதிகரித்து இருப்பது காட்டுகிறது.

ஆர்டிஇ-ல் அதிகப்படியாக விண்ணப்பம் குவிந்ததற்கு தனியார் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் கல்வியின் தரம் ஆகியவற்றின் மீதான பெற்றோர்களின் நம்பிக்கையே இதற்கு காரணம் என்று தனியார் பள்ளிகளின் தரப்பில் சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி ஆர்டிஇ- திட்டத்தின் கீழ் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும் விண்ணப்பங்கள் அதிகரிக்க காரணம் என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

அதேவேளையில், கொரோனாவுக்கு பிறகு பெற்றோர்களின் நிதி அந்தஸ்து உயர்ந்து இருப்பதும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் சேர்க்க ஆர்வம் காட்டுவது ஒரு காரணம் என்று பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்படும் என்றாலும் கூட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை போல முற்றிலும் இலவசமாக இருக்காது என்றும் செலவுகள் இருக்கவே செய்யும் என்கிறார்கள் அத்துறையை சேர்ந்தவர்கள்.

அதேவேளையில், தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ-யின் கீழ் சேர் விண்ணப்பம் அதிகரித்து இருப்பது கவலைக்குரியது என்று கூறும் பொதுப்பள்ளி அமைப்பின்(SPCSS) மாநில பொதுச்செயலாளர் பிரிஞ் கஜேந்திர பாபு கூறியதாவது: தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு மதிய சத்துணவு உள்ளிட்ட அரசின் திட்டங்கள் கிடைப்பது இல்லை.

அரசு துவக்க பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிப்பதை நிறுத்திவிட்டு கல்வி உரிமை என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கீழ் மட்டுமே வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.

No comments