Breaking News

ஆயிரம் சந்தேகங்கள்: வீடு, தங்கம், பங்கு சந்தை எதில் அதிக லாபம்?

 


ங்குச்சந்தை அவ்வளவு பாதுகாப்பானதா? பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தால் முதலீடு போய்விடுமே? வீடு, நிலத்தில் முதலீடு செய்தால், அந்த பயம் இல்லைதானே?
கே.ஜே. செல்வராஜ், கோத்தகிரி, நீலகிரி பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டு பற்றி படிக்க மேனேஜ்மென்ட் முழுநேர படிப்பு உள்ளதா? படித்துவிட்டு மியூச்சுவல் பண்டு மேலாளராக பணியாற்ற வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தங்கள் அறிவுரை தேவை.பா.முரளிதரன், கோவை.

எனக்கு வயது 40, குடும்பத் தலைவி. ஒரு குழந்தைக்குத் தாய். மாதந்தோறும் வீட்டுக் கடன் கட்டி வருகிறேன். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பம்.

எங்கே ஆரம்பிக்க வேண்டும்?எஸ். சுதர்ஸ்லின், வில்லுக்குறி, கன்னியாகுமரி. நான் ஓர் அரசு பணியில் நிரந்தரமான சம்பளத்தில் உள்ளேன். வயது 42. பெண்கள் கல்யாணத்துக்காக பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடு செய்ய விரும்புகிறேன்.

அதிக ரிஸ்க் இல்லாமல், நான் எப்படிப்பட்ட பங்குகளை அணுக வேண்டும்? டி.ராஜகோபாலன், கும்பகோணம், தஞ்சாவூர். பெண்கள், பங்குச் சந்தை முதலீட்டில் நிறைய ஆர்வம் காட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு மனநிலைகளின் வெளிப்பாடு தான் மேலே உள்ள கேள்விகள் அனைத்தும்.

அதனால் தான் அவற்றை ஒருங்கிணைத்து பதில் சொல்கிறேன். கடந்த இரண்டு வாரங்களாக, வீடு வாங்குவதை நான் முதலீடாக கருதுவதில்லை என்று சொன்னதின் விளைவாக, இந்தக் கேள்விகள் எழுகின்றன. கொஞ்சம் விரிவாகவே விளக்கிவிடுகிறேன். வீடு, வைப்புநிதி, தங்கம், கடன் பத்திரம், மியூச்சுவல் பண்டு, பங்குகள் உள்ளிட்டவை, பல்வேறு வகையான சொத்துக்கள்.

இந்த சொத்துக்களை இன்றைய தேதியில் எப்படிப் பார்க்க வேண்டும்? மதிப்பீடு செய்ய வேண்டும்? இதில் இரண்டு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று, பாதுகாப்பு, முதலுக்கு மோசம் ஏற்படக் கூடாது என்ற கோணம்.

இரண்டு, கூடுதல் வருவாய் ஈட்டித் தர வேண்டும் என்பது. உங்கள் முதலீட்டு முடிவைத் தீர்மானிப்பது முதல் கோணம் தான் என்றால், வீடு, நிலம், தங்கம் ஆகியவை உங்களுக்கான வாய்ப்புகள். உலகம் தோன்றிய காலத்திலிருந்து இவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் இருந்து வந்துள்ளன. இவற்றை ஆங்கிலத்தில் 'பிசிக்கல் அசெட்' என்று அழைப்பார்கள்.

அதனால், இயல்பாகவே இவற்றின் வருவாய் மீது நமக்குப் பெரிய எதிர்பார்ப்பு கிடையாது. வந்தது போதும் என்ற மனநிலை இருக்கும். கூடுதலாக ஓர் அம்சம் உண்டு. அது மனநிம்மதி, திருப்தி, பெருமிதம், கெளரவம் ஆகியவை.

'எலி வளையானாலும் தனி வளை வேண்டும்' என்பது நம்மிடையே உள்ள முதுமொழிகளில் ஒன்று. உடைமை மனப்பான்மையின் தொடர்ச்சி இது. வருங்கால சந்ததிகளுக்கு எதையோ விட்டுவிட்டுப் போகிறோம் என்ற கடமை உணர்வும் கூட ஏற்படும்.பி.பி.எப்., வைப்பு நிதி, பல்வேறு அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்கள் எல்லாம் இன்னொரு முதலீட்டு வகை. இவை அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன் வருபவை.அரசு கடன் பத்திரங்கள், தனியார் கடன் பத்திரங்கள் என்பவை இன்னொரு வகை.

இவை அந்தந்த அரசு அல்லது தனியார் நிறுவனம் தரும் உத்தரவாதத்துடன் வருபவை. பங்குகள், மியூச்சுவல் பண்டுகள், யூலிப்கள் உள்ளிட்டவை கொஞ்சம் பின்னால் வந்தவை. இவை இன்று பெரும்பாலும் 'டீமேட்' வடிவத்துக்கு வந்துவிட்டன. கண்ணெதிரே இவற்றைப் பார்க்க முடியாது.

கையால் தொட முடியாது. அதனால், அவற்றின் மீது எப்போதும் ஒரு சந்தேகமும் பயமும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், இவையெல்லாம் ஏதோ ஒரு சொத்தின் மீது, நிறுவனத்தின் மீது முதலீட்டுக்கு என்றே உருவாக்கப்பட்ட வடிவங்கள். இரண்டு அம்சங்களை கவனிப்போம்.

ஒன்று, இந்தச் சொத்துக்கள் 20 ஆண்டு கால அளவில் எவ்வளவு ரிட்டர்னை உருவாக்கித் தந்துள்ளன? வைப்பு நிதி, கடன் பத்திரங்கள் உள்ளிட்டவை ஏறத்தாழ 7.20 சதவீத ரிட்டர்னையும், தங்கம் 12 சதவீத ரிட்டர்னையும், மனை வணிகம் 9 சதவீத ரிட்டர்னையும், பங்குச்சந்தை 17.20 ரிட்டர்னையும் உருவாக்கித் தந்துள்ளன. 30.9 சதவீத வரிஇரண்டு, நமது நாட்டில் நிலவும் பணவீக்கம், வரிகள் மற்றும் இந்த முதலீடுகள் சார்ந்த கட்டணங்கள். தோராயமாக 6.50 சதவீத பணவீக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். அவரவர் வருவாய்க்கு ஏற்ப, 10 முதல் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.

கட்டணங்கள் தனிக்கணக்கு. இந்த நிலையில், 'ரியல் ரிட்டர்ன்' என்று சொல்லப்படும் உண்மையான வருவாய் எவ்வளவு என்று பார்ப்போம். இதற்கு ஒரு பார்முலா இருக்கிறது. போஸ்ட் டாக்ஸ் ரிட்டர்ன் = ஆர் - (ஆர்*டி.ஆர்%).

இதில் 'ஆர்' என்பது 'ரேட் ஆப் ரிட்டர்ன்'. 'டி.ஆர்.' என்பது 'டாக்ஸ் ரேட்.'வைப்பு நிதியில் 7 சதவீதம் ரிட்டர்ன் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால், போஸ்ட் டாக்ஸ் ரிட்டர்ன் = 7 - (7*30.9/100) = 4.837 சதவீதம். இதில் 30 சதவீத வரி கட்டுபவரைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். வரியோடு இதர தீர்வைகளைச் சேர்த்தால் 30.9 சதவீத வரி வரும். வருவாய் பெருக்கம் நிச்சயம்இதேபோல் கணக்குப் போட்டால், தங்கம் 8.292 சதவீதம், மனை வணிகம் 6.219 சதவீதம், பங்குச்சந்தை 11.8852 சதவீத போஸ்ட் டாக்ஸ் ரிட்டர்ன்கள் தருகின்றன.இப்போது 6.50 சதவீதம் பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால், உங்கள் கையில் எவ்வளவு பணம் மிச்சம் இருக்கும்? வைப்பு நிதி = 4.837 - 6.50 = (மைனஸ்) 1.663 சதவீதம்; மனை வணிகம் = (மைனஸ்) 0.281 சதவீதம்; தங்கம் = (பிளஸ்) 1.792 சதவீதம்; பங்குச் சந்தை = (பிளஸ்) 5.3852 சதவீதம்.இதனால் தான் வீடு என்பது 'முதலீடு' அல்ல என்று சொல்கிறேன். அதற்காக நான் வீடு வாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை.

அதை 'முதலீடு' 'வருவாய் பெருக்கம்' 'எதிர்காலத்துக்கான சேமிப்பு' உள்ளிட்ட அடைமொழிகளால் வரையறை செய்யாதீர்கள். அது மன நிம்மதிக்கானது, அவ்வளவு தான். பங்குச்சந்தையில் நேரடியாக குதிக்காதீர்கள். முதலில் ஓரிரண்டு ஆண்டுகளேனும் மியூச்சுவல் பண்டுகள், பங்குச்சந்தைகள் பற்றி நாளிதழ்கள், பருவ இதழ்களில் வரும் கட்டுரைகள், புத்தகங்கள் ஆகிய அனைத்தையும் வாசியுங்கள்.

பின்னர், 'பெண்ணுக்கு கல்யாண செலவு' என்பன போன்ற குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு, மியூச்சுவல் பண்டுகளில் எஸ்.ஐ.பி., வாயிலாக சேமிக்கத் துவங்குங்கள். அதில் ஓரளவு நம்பிக்கையும் துணிவும் பிறந்த பின்னர், பங்குச்சந்தைக்கு வாருங்கள். பங்குச்சந்தைக்கான 18 மாத 'எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ.,' படிப்பை தேசிய பங்குச்சந்தை வழங்குகிறது. அதில் சேரலாம்.

மியூச்சுவல் பண்டுக்கு 'ஆம்பி' அமைப்பின் தேர்வு எழுத வேண்டும். அதன் பின்னர் மியூச்சுவல் பண்டு ஆலோசகராக மாறலாம்.முதலீடு என்பது ஒரு மாரத்தான் ஓட்டம். அதற்கான முன் தயாரிப்பு விரிவானது. நன்றாக படித்துவிட்டு, இதில் கால் வையுங்கள், வருவாய் பெருக்கம் நிச்சயம்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ், pattamvenkatesh@gmail.com ph:98410 53881

No comments