Breaking News

கரும்பு ஜூஸ் நிறைய குடிக்கறீங்களா? என்னென்ன ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சிகோங்க!

 

கோடை காலம் உச்சத்தில் இருக்கிறது. வழக்கத்தை விட, சோர்வும் தாகமும் அதிகமாக பலருக்கும் உண்டாகிறது. எனவே, அவ்வபோது ஜில்லென்று ஏதேனும் குடிப்பது நல்லது என்று தோன்றுவது இயல்பானது.

நம்மில் பலரும், பாட்டில் பானங்கள், சோடாக்கள் போன்ற பானங்களைத் தவிர்த்து, இயற்கையான பானங்களை அதிகமாக குடிக்கத் துவங்கியுள்ளோம். அதில் முக்கியமானது, கரும்பு ஜூஸ். சில்லென்ற பிரெஷ்ஷான கரும்பு ஜூசை விரும்பாதவர்கள் குறைவு. அதிலும், சாலைகளில் வழி நெடுகிலும் கரும்பு ஜூஸ் கடைகள் உள்ளன. கரும்பு சாறில் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எனவே, எங்கு சென்றாலும் பலரும் ஜூஸ் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், கரும்பு ஜூஸில் ஒரு சில ஆபத்துக்கள் உள்ளன. அது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது அல்லது கெட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது.

பயணம் செய்யும் போது, வழியில் கிடைக்கும் கரும்பு சாறு வெயிலுக்கு ஆறுதல் என்பது மட்டுமல்ல, ஆற்றலும் தரும், நம் உடலை குளிர்ச்சியாக்கும். ஆனால் இதுவும் சில நேரங்களில் உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

சிவப்பு கரும்பு ஜூஸ் அபாயம்: சிவப்பு கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் கரும்பு சாறு குடிப்பது உடல் நலத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இவ்வகை கரும்புச் சாறுபாலை குடிப்பதால் வயிற்றுப்போக்கு, வயிறு உப்பசம், மந்தமாக இருப்பது மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். இரைப்பைக் குடலியல் நிபுணர்கள் மற்றும் பிற நிபுணர்கள், அசுத்தமான, சுகாதாரமற்ற நிலையில் உள்ள சாலையோர கரும்பு மற்றும் பிற பழச்சாறுகளை குடிப்பதை எச்சரிக்கின்றனர். இது போன்ற அசுத்தமான உணவு மற்றும் பானங்களால் ஹெபடைடிஸ் ஏ, மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கரும்பு சாறில் சேர்க்கப்படும் ஐஸ்கட்டிகள்: பெரும்பாலும், கரும்பு ஜூஸ் செய்யப்பட்டு, அதில் ஐஸ் கட்டிகள் சேர்க்கப்படும். கரும்பு சாறில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளின் தரமும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். தொண்டை வலி, இருமல், சளி போன்றவற்றை உண்டாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

கரும்பு சாறு தயாரிக்கும் இயந்திரம்: கரும்பு ஜூஸ் தயாரிக்கும் இயந்திரங்களை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், கரும்பு சாறு விற்பனை செய்யப்படும் எல்லா இடங்களிலும் அவ்வாறு செய்கிறார்களா என்பது கேள்விக்குறி தான். ஒரு சிலர், பல ஆண்டுகளாக இயந்திரத்தை சுத்தம் செய்யாமல் உள்ளனர். இது தவிர, கரும்புச்சாறுக்கு பயன்படுத்தப்படும் எலுமிச்சை, இஞ்சி அல்லது புதினாவையும் கழுவாமல் நேரடியாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் நோய் வாய்ப்பட வாய்ப்பு உள்ளது.


No comments