ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு விவகாரம்: பள்ளிக் கல்வித் துறை செயல்முறைகள் வெளியீடு :
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: “தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், உள்பட உயர்கல்வி நிறுவனங்கள் பயிற்றுவிக்கும் பட்டப்படிப்புகளுக்கு இணைத் தன்மை வழங்குவது குறித்து உயர்கல்வித் துறை அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான அரசாணையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்படாத கோடைக்கால தொடர் வகுப்புகளின் வாயிலாக வழங்கப்படும் எம்பில் (mphil)படிப்பானது, முழுநேர எம்பில் படிப்பு கல்வித் தகுதிக்கு இணையானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த நடவடிக்கையின் போது இந்த உத்தரவை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இத்தகவலை சுற்றறிக்கை மூலமாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வுக்கு உயர்கல்வித் தகுதிக்கான சான்றிதழை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments