Breaking News

தமிழகத்தில் முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு தேதி தள்ளிவைப்பு.. TRB முக்கிய அறிவிப்பு

 


தமிழகத்தில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு செப்டம்பர் 28 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் அந்த தேர்வு திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் காலிப்பணியிடங்களை டிஆர்பி எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தேர்வு வாரியம் தேர்வுகள் நடத்தி அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர், ஆசிரியைகளை தேர்வு செய்து வருகிறது.

இந்நிலையில் தான் தமிழகத்தில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 உள்ளிட்ட 1,996 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் நேற்று தொடங்கியது. இதற்கான தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
‛முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண்.02/2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (www.trbtn.gov.in) வாயிலாக 10.07.2025 (நேற்று) வெளியிடப்பட்டது. இப்பணியிடங்களுக்கான தேர்வு நாள் 28.09.2025 என அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் அதேநாளில் (28.09.2025) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Combined Civil Services Examination - II (Group II and II-A Services) தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், மேற்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1, கணினி பிற்றுநர் நிலை - 1 ஆகிய பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‛‛முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்களுக்கான அறிக்கை (எண் 02/2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் www.trb.tn.gov.in வாயிலாக இன்று(10.07.2025) வெளியிடப்படுகிறது. பாடவாரியான காலிப்பணியிட விவரங்கள் தமிழ் - 216 ஆங்கிலம் - 197 கணிதம் - 232 இயற்பியல் - 233 வேதியியல் - 217 தாவரவியல் - 147 விலங்கியல் - 131 வணிகவியல் 198 பொருறியல் - 169 வரலாறு - 68 புவியியல் - 15 அரசியல் அறிவியல் - 14 கணினி பயிற்றுநர் நிலை I - 57 உடற்கல்வி இயக்குநர் நிலை I -102 என்று மொத்தம் 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கல்வி தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வற்கான அனைத்து விவரங்களும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள்இணையதளம் வாயிலாக (Online Application)விண்ணப்பிக்க ஏதுவாக 10.07.2025 முதல் 12.08.2025 பிற்பகல் 5 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
 
எனவே விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலான விண்ணப்பிக்கும் போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன்பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது தேர்வு தேதி மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.




No comments