Breaking News

திரும்பி பார்க்க வைத்த திருப்பூர் பள்ளி! மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ரோபோ டீச்சர்! சூப்பரா இருக்கே:

 


இந்த நவீனக் காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான் இருந்து வருகிறது. ஏஐ வளர்ச்சி மனிதக் குலத்திற்குப் பல்வேறு வகைகளிலும் உதவியாக இருந்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் மெல்ல அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே திருப்பூரில் உள்ள பிரபலப் பள்ளியில் புதிய ஹியூமனாய்டு டீச்சிங் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காலத்தில் ஏஐ மற்றும் கம்ப்யூட்டர் வளர்ச்சி எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பங்கள் மனிதக் குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. வரும் காலங்களில் இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் அதிகமாகவே இருக்கும்.
 
ரோபோ டீச்சர் இதனால் எதிர்காலத்தில் உள்ள நிலைமைக்கு ஏற்ப அடுத்த தலைமுறை குழந்தைகளைத் தயார் செய்ய வேண்டியது கட்டாயம். இதற்கிடையே திருப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்று புதிதாக ஹியூமனாய்டு டீச்சிங் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோ குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமின்றி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் துல்லியமான பதில்களையும் அளிக்கிறது. திருப்பூர் பாரதி வித்யா பவன் பள்ளியில் தான் இதுபோல ஆசிரியர் பணி செய்யும் வகையில் ஹியூமனாய்டு டீச்சிங் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோ மாணவர்களின் கேள்விகளுக்குத் துல்லியமான பதில் அளிக்கிறது. மேலும், இந்த ரோபோவுக்கு இணைய வசதியும் இருக்கிறது. இதனால் சிக்கலான பாடங்களையும் கூட மாணவர்களுக்குப் புரியும் வகையில் புதிய நுணுக்கங்களுடன் எளிமையான பதில்களை வழங்குகிறது.

கற்றல் திறன் மேம்படும் இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்பதால் இந்த வகை ரோபோவை டீச்சிங் செய்ய மாணவர்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாகப் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது குறித்து திருப்பூர் பாரதி வித்யா பவன் பள்ளி தாளாளர் செல்வராஜ் மேலும் கூறுகையில், "இப்போது நாங்கள் எங்கள் பள்ளியில் புதிதாக ஹியுமனாய்ட் டீச்சிங் ரோபோ அறிமுகம் செய்துள்ளோம். ஏஐ தான் எதிர்காலம் இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும்.. பாடங்களில் திடீரென மாணவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு ஆசிரியர்களால் பதில் கொடுக்க முடியாமல் போகலாம்.. ஆனால், அந்தக் கேள்விகளுக்குக் கூட இந்த ரோபோ எளிதாகப் பதில் வழங்கும். ஏஐ தான் எதிர்காலம் என்ற நிலை உருவாகிவிட்டது. இதனால் வளரும் போது இதேபோன்ற தொழில்நுட்பத்தை மாணவர்கள் பார்த்து கற்றுக் கொண்டால் அது அவர்களுக்கு மிக பெரிய உதவியாக இருக்கும்.

சந்தேகங்களைக் கேட்கலாம் இந்த ரோபோ ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்குமான அனைத்துப் பாடங்களையும் எடுக்கும். மேலும், மாணவர்களின் அனைத்து விதச் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும்.. இதன் மூலம் மாணவர்களின் நினைவாற்றல் மற்றும் திறன் மேம்படும்.. மேலும், இந்த ரோபோவை ஒவ்வொரு வகுப்பறைக்கும் சுழற்சி முறையில் அனுப்புவோம். மாணவர்கள் தங்கள் சந்தேகத்தைப் போக்க இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார். திருப்பூர் பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரோபோ டீச்சர் பலருக்கும் ஆச்சரியத்தைத் தருவதாக இருக்கிறது. மாணவர்கள் எந்தப் பாடத்தில் எந்தச் சந்தேகம் கேட்டாலும் நொடியில் அதற்கான பதிலை அளித்துவிடுகிறது. இது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.



 

No comments