Breaking News

சிறு தானிய உணவுகளை எப்படி சமைப்பது என தெரியலையா..? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!

 

 மையல் என்பது ஒரு கலை. நமக்கு பிடித்தமானவர்களுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ஆசையாக சமைத்து, அன்போடு பரிமாறுவதில் கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது.
நாம் சாப்பிடும் உணவு நமது ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிப்பதால், ஆரோக்கியமான உணவு பொருட்களை சாப்பிடுவது மிகவும் அவசியமாகிறது.

ஆரோக்கியமான உணவு என்றாலே நிச்சயமாக சிறுதானியங்களுக்கு ஒரு பெரிய இடம் உண்டு. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சிறுதானியங்கள் உணவு பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு தானியங்களில் க்ளூட்டன் இருக்காது. ஆகவே இது குளூட்டன் அலர்ஜி கொண்ட நபர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது.

மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறுதானிய உணவு ரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது. ஆனால் சிறுதானியங்களை பொருத்தவரை, வழக்கமான அரிசியை சமைப்பது போல நாம் சமைக்க கூடாது. சிறு தானியங்களை சமைப்பதற்கென்று ஒரு சில நுணுக்கங்கள் உள்ளன அவை என்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சிறுதானியங்களை கழுவுதல்: உங்களுக்கு தேவையான அளவு சிறுதானியத்தை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். அவற்றை நன்றாக கழுவி மேலே மிதக்கக்கூடிய அழுக்கு மற்றும் தூசிகளை அகற்றி விடுங்கள். சமைப்பதற்கு முன்பு சிறுதானியங்களை இரண்டு முதல் மூன்று முறை நன்றாக கழுவ வேண்டும்.

சிறுதானியங்களை ஊறவைத்தல்: சிறுதானியங்களை நன்றாக சுத்தம் செய்த பிறகு, அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி குறைந்தபட்சம் 8 முதல் 10 மணி நேரம் அதனை ஊற வைக்க வேண்டும். சிறுதானியங்களை ஊற வைப்பது ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது. இது சிறுதானியம் வேகும் நேரத்தை குறைக்கிறது. எனினும், சிறுதானியங்களை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

சிறுதானியங்களை சமைத்தல்:

  • கம்பு: ஒரு குக்கரில் ஒரு கப் ஊறவைத்த கம்புடன் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர் அடுப்பை அதிக தீயில் வைத்து 15 விசில்கள் வரவிட்டு வேக வைத்து எடுக்கவும்.

  • சோளம்: ஒரு குக்கரை எடுத்து அதில் ஒரு கப் ஊற வைத்த சோளத்தை சேர்க்கவும். இதனோடு 3/4 கப் தண்ணீர் மற்றும் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து, குக்கரில் 12 விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.

  • கேழ்வரகு: ஒரு கப் ஊறவைத்த கேழ்வரகுடன் 1/4 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 12 விசில்கள் வரும் வரை கேழ்வரகை அதிக தீயில் வேக வைக்க வேண்டும்.

தற்போதைய மக்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். ஆகவே பெரும்பாலான நபர்கள் தங்களது அன்றாட உணவில் சிறுதானியங்களை பிரதான உணவாகவே சாப்பிட்டு வருகின்றனர். சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது நமக்கு அதிக ஆற்றலை தருகிறது. அதோடு தசை இழப்பு மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனைகளை தடுக்கிறது. உலகில் உள்ள மூன்றில் ஒரு பகுதி மக்கள் சிறுதானியத்தை உணவுகளாக சாப்பிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கான ரகசியத்தில் சிறுதானியமும் ஒன்று. சிறுதானியத்தில் காணப்படும் கரையாத நார்ச்சத்து நமது செரிமான அமைப்பில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உதவி செய்கிறது. இது மலச்சிக்கல் ஏற்படுவதை தடுப்பதோடு பெருங்குடல் புற்றுநோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. இத்தகைய நன்மைகள் அடங்கிய சிறுதானியத்தை தினமும் சாப்பிடுவதன் மூலமாக நீங்களும் பலனடையுங்கள்.

No comments