Breaking News

வாரம் ஒருமுறை ஆட்டு மண்ணீரல் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?

ஆட்டுக்கறி பெரும்பாலானோரின் விருப்பமான இறைச்சியாகும். ஆட்டின் இறைச்சி மட்டுமின்றி, அதன் உறுப்புக்களும் மக்களால் விரும்பி சாப்பிடப்பட்டு வருகிறது.

அதில் ஒன்று தான் ஆட்டு மண்ணீரல். இந்த ஆட்டு மண்ணீரல் 'சுவரொட்டி' என்றும் அழைக்கப்படுகிறது.

சுவரொட்டி என்று ஆட்டு மண்ணீரல் அழைக்கப்பட காரணம், அது பச்சையாக இருக்கும் போது சுவற்றில் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் தான் இது சுவரொட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டு மண்ணீரலில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.

முக்கியமாக இதில் புரோட்டீன், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி12, பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. எனவே இந்த ஆட்டு மண்ணீரலை உட்கொள்ளும் போது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

சரி, ஆட்டு மண்ணீரலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? கீழே வாரம் ஒருமுறை ஆட்டு மண்ணீரல்/ஆட்டு சுவரொட்டியை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. இரத்த சோகையைத் தடுக்கும்

ஆட்டு மண்ணீரல்/ஆட்டு சுவரொட்டியில் ஏராளமான அளவில் இரும்புச்சத்து உள்ளது. அதுவும் வெறும் 50 கிராம் ஆட்டு மண்ணீரலில் ஒரு நாளைக்கு வேண்டிய இரும்புச்சத்து முழுமையாக உள்ளது. எனவே உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அல்லது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்டு மண்ணீரலை வாரம் இரண்டு முறை உட்கொண்டு வந்தால், நிச்சயம் இப்பிரச்சனையில் இருந்து விரைவில் குணமாகலாம்.

2. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

ஆட்டு மண்ணீரலை சாப்பிடுவதால் கிடைக்கும் மற்றொரு முக்கியமான நன்மை என்றால், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் அடிக்கடி ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக அல்லது பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் ஆட்டு மண்ணீரலை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கி, உடலை பாதுகாக்கும்.

3. பெருங்குடல் அழற்சியை சரிசெய்யும்

பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்டு மண்ணீரலை உணவில் சேர்ப்பதன் மூலம், அதிலிருந்து விரைவில் விடுபடலாம். ஏனெனில் ஆட்டு மண்ணீரலில் பெருங்குடல் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஆற்றல் உள்ளது. அதற்கு இதை மாதம் இரண்டு முறை உணவில் சேர்த்து வர வேண்டும்.

4. சிறுநீரக பிரச்சனைகளைத் தடுக்கும்

ஆட்டு மண்ணீரல் சிறுநீரக பிரச்சனைகளைத் தடுக்கும் திறன் கொண்டது. ஏற்கனவே சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்டு மண்ணீரலை உட்கொண்டு வந்தால், விரைவில் அதிலிருந்து குணமாகலாம். அதற்கு சிறுநீரக பிரச்சனையை கொண்டவர்கள் மாதம் 2 முறை உட்கொள்ள வேண்டும்.

5. மாதவிடாய் பிரச்சனை சரியாகும்

தற்போது நிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இப்படி மாதவிடாய் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்களுக்கு ஆட்டு மண்ணீரல் ஒரு வரப்பிரசாதம். அதற்கு மாதவிடாய் பிரச்சனையைக் கொண்ட பெண்கள் வாரத்திற்கு ஒருமுறை ஆட்டு சுவரொட்டியை உட்கொள்ள வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

6. முடக்கு வாதம்

பெரும்பாலான பெண்கள் 40 வயதை கடந்த பின் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் முடக்குவாதம். இந்த முடக்குவாத பிரச்சனைக்கு ஆட்டு மண்ணீரல் சிறந்த தீர்வை அளிக்கும். அதற்கு முடக்கு வாதம் உள்ளவர்கள் வாரத்திற்கு 2 முறை ஆட்டு சுவரொட்டியை சமைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் அதில் உள்ள சத்துக்களால் நல்ல தீர்வைக் காணலாம்.

ஆட்டு மண்ணீரலை எப்படி சமைத்து சாப்பிடலாம்?

ஆட்டு மண்ணீரலை வறுவல் போன்று செய்து சாப்பிடலாம். இந்த வறுவலை அப்படியே சாப்பிடலாம் அல்லது ரசம் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். ஆட்டு மண்ணீரலின் சுவையானது ஈரலின் சுவையைப் போன்றே இருக்கும். இப்போது அதை எப்படி சமைப்பது என்பதைக் காணலாம்.

தேவையான பொருட்கள்:

* சுவரொட்டி - 250 கிராம்

* மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

* சோம்பு - 1 டீஸ்பூன்

* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 3

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் சுவரொட்டியின் வெளிப்புறத் தோலை நீக்கிவிட வேண்டும். அதாவது வெள்ளை நிறத் தோலை நீக்கிவிட வேண்டும்.

* பின் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் ஊற வைத்து, நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்பு சுத்தம் செய்த சுவரொட்டியை துண்டுகளாக்கி, ஒரு பௌலில் எடுத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். அப்போது சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து சுவரொட்டியை சேர்த்து, மஞ்சள் தூளை தூவி கிளறி, 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 30 நிமிடம் நீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.

* நீர் முற்றிலும் வற்றியதும், இறுதியாக மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவரொட்டி வறுவல் தயார்.

No comments