Breaking News

அரசு பள்ளி வகுப்பறையில் புகுந்து ஆசிரியர், மாணவருக்கு வெட்டு; நண்பர்களுடன் சக மாணவர் வெறிச்செயல்

 


திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

அங்கு, பிளஸ் 2 அறிவியல் மற்றும் கலைப் பிரிவில் படிக்கும் இரு மாணவர்களுக்கு, சில மாதங்களாக யார் பெரிய ஆள் என்ற பிரச்னையில் முன் விரோதம் இருந்தது. இதனால், இருவரும் பள்ளி வளாகத்திலும், பள்ளிக்கு வெளியேயும் அடிக்கடி மோதினர்.கடந்த வாரம் இவர்களின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதால், அறிவியல் பிரிவு மாணவரை, பள்ளியில் இருந்து நீக்க நிர்வாகம் ஆலோசித்து வந்தது. இது குறித்து, அந்த மாணவரின் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த அறிவியல் பிரிவு மாணவர், நேற்று மதியம் வரை வகுப்பறையில் இருந்தார்.பின், பள்ளியில் இருந்து வெளியே சென்ற அவர், சீருடையை மாற்றி, தன் நண்பர்கள் மூவருடன், முகத்தை மறைக்கும் மருத்துவ முகமூடியை அணிந்து, பள்ளியின் பின்புற வாசல் வழியாக மீண்டும் வந்தார்.கலைப்பிரிவு வகுப்பறைக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த மாணவரை கத்தியால் கையில் வெட்டினர்.

அதை தடுக்க வந்த சிவகுமார், 52, என்ற தற்காலிக ஆசிரியரை தலையில் வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பினர். இதை பார்த்து சக மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.பின், காயமடைந்த மாணவரும், ஆசிரியரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆசிரியருக்கு தலையில் ஐந்து தையல்கள் போடப்பட்டு உள்ளன. தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீசார், பள்ளி மற்றும் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். ஸ்ரீரங்கம் தாசில்தாரும் விசாரணை நடத்தினார்.போலீசார் வழக்கு பதிந்து, ஆசிரியர், மாணவரை வெட்டியவர்களை தேடி வருகின்றனர். வகுப்பறைக்குள் புகுந்து, அதே பள்ளி ஆசிரியர் மற்றும் சக மாணவர் வெட்டப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments