Breaking News

இளம் வயதில் மாரடைப்பு வரப்போகுதுன்னா.. இந்த 4 அறிகுறியும் ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தெரியுமாம்.. உஷார்...

 


முன்பெல்லாம் இதய நோய்கள் வயதானவர்களிடம் தான் பொதுவாக காணப்பட்டது. ஆனால் தற்போது இதய நோயானது இளம் வயதினரிடையே அதிகம் காணப்படுவதால், இது ஒரு பெரிய கவலைக்குரிய பொதுவான விஷயமாக மாறிவிட்டது.

இதுவரை உலகம் முழுவதும் புற்றுநோயால் தான் ஏராளமானோர் மரணித்து வந்தனர்.

ஆனால் சமீப காலமாக புற்றுநோயை மிஞ்சும் வகையில் மாரடைப்பால் ஒவ்வொரு நாளும் அதிகமானோர் இறந்து வருகிறார்கள். அதுவும் இளம் வயதினர் பலர் மரணத்தை சந்தித்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனமும் உலகம் முழுவதும் அதிக இறப்புக்கு மாரடைப்பு தான் முக்கிய காரணமாக கூறுகிறது.

இந்த மாரடைப்பு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆகியவற்றால் தான் ஒருவருக்கு வருகிறது. ஆனால் இப்படிப்பட்ட மாரடைப்பு ஒருவருக்கு வரப்போகிறது என்றால், சில நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களுக்கு முன்பே அறிகுறிகள் தெரிவதாக இதய நிபுணர்கள் கூறுகின்றனர்.

அந்த அறிகுறிகளை ஒருவர் கவனித்து, மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், மாரடைப்பால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம். கீழே இளம் வயதினர் மற்றும் ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில ஆரம்பகால அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிக வியர்வை

ஒருவருக்கு வழக்கத்தை விட அதிகமாக வியர்த்தால், எந்த ஒரு வேலையையும் செய்யாமல் அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அது வரவிருக்கும் மாரடைப்பின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். எனவே இந்த அறிகுறிகளை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே கவனம் செலுத்துங்கள்.

கழுத்து மற்றும் தோள்பட்டை வலி

இளம் வயது பெண்கள் காரணமின்றி கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலியை அதிகம் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் பெண்களுக்கு மாரடைப்பின் போது நெஞ்சு வலியை விட, கழுத்து, தாடை, தோள்பட்டை போன்ற பகுதிகளில் தான் அதிக வலியை தொடர்ந்து சந்திக்க நேரிடும்.

நெஞ்சு இறுக்கம்

திடீரென்று நெஞ்சு பகுதியில் வலி அல்லது இறுக்கத்தை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதுவும் மாரடைப்பின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம்.

கையில் கூர்மையான வலி

நிறைய பேர் கைகளில் கூர்மையான வலியை அனுபவிக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் இந்த வலி பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் தீவிரமாக இருந்தால், அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதுவும் கைகளில் வலி தொடங்கி, அந்த வலி தாடை, கழுத்து வரை பரவினால், அது வரவிருக்கும் மாரடைப்புக்கான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

இதயத்தை ஆரோக்கிய வைத்துக் கொள்வதற்கான சில வழிகள்

* இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரியுங்கள். மதுப்பழக்கம் மற்றும் புகைப் பழக்கம் இருந்தால், அதைக் கைவிடுங்கள். முக்கியமாக தினமும் 7-8 மணிநேர தூக்கத்தை தவறாமல் பெற முயலுங்கள்.

* இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உணவுகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதற்கு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதோடு புரோட்டீன் உணவுகள், நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். நீரை அதிகமாக குடிக்க வேண்டும். உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* மன அழுத்தம் ஒருவரது இதய ஆரோக்கியத்தை பாழாக்கும் என்பதால், மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க யோகா, தியானம் போன்றவற்றை தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

No comments