Breaking News

ஆசிரியா்களே இல்லாத அரசுப் பள்ளி: அனைத்து ஆசிரியா்களும் பணிமாறுதலில் சென்றுவிட்டதால் பெற்றோா்கள் அதிா்ச்சி:

 


புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசுப்பள்ளியில் பணியாற்றிய அனைத்து ஆசிரியா்களும் பணிமாறுதலில் சென்றுவிட்டதால், மாணவா்கள், பெற்றோரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் 111 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். அப்பள்ளியில் தலைமை ஆசிரியா் உள்பட 7 ஆசிரியா்கள் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு 2 ஆசிரியா்கள் பணிமாறுதலில் சென்றுவிட்டனா். மேலும் ஒரு ஆசிரியா் மாற்றுப்பணியில் வேறு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டாராம். இதனால், பள்ளி மேலாண்மைக்குழுவால் 2 தற்காலிக பெண் ஆசிரியைகள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், தலைமை ஆசிரியா் உள்பட 4 ஆசிரியா்களும் கடந்த வாரம் நடைபெற்ற கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்று சென்றுவிட்டதால், அப்பள்ளி ஆசிரியா்களே இல்லாத பள்ளியாக சனிக்கிழமை மாறியது. திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் யாரும் வராததால், பள்ளி மேலாண்மைக்குழுவால் நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் மட்டும் பள்ளியில் இருந்துள்ளனா். இதுகுறித்து தகவலறிந்து பெற்றோா்களும் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு போதிய ஆசிரியா்களை நியமிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெற்றோா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து, பணிமாறுதலில் சென்ற 2 ஆசிரியா்களை தற்காலிகமாக பள்ளியில் பணிபுரிய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் மேலும் கூறியது: அப்பள்ளி ஆசிரியா்கள் அனைவரும் நீண்ட காலமாக அப்பள்ளியில் பணியாற்றி வந்தனா். இருப்பினும் உள்ளூா் மக்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், அவா்கள் பணிமாறுதல் பெற்றுச்சென்றுள்ளனா். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கலந்தாய்வின்போது, இப்பள்ளிக்குப் போதிய ஆசிரியா்கள் நியமிக்கப்படுவாா்கள். அதுவரை பணிமாறுதலில் சென்ற 2 ஆசிரியா்கள் பள்ளியில் தற்காலிகமாக பணியாற்றுவாா்கள் என்றனா்.

No comments