Breaking News

பழைய ஓய்வூதிய திட்டம்: வருமா, வராதா? கருப்பு பேட்ஜுடன் வந்த தலைமை செயலக பணியாளர்கள்!

 


பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய 3 திட்டங்கள் குறித்து விரிவாக விசாரித்து அரசிடம் அறிக்கை சமர்பிக்க ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

இது தொடர்பாக ககன்தீப் சிங் ஆய்வு குழுவும் அரசு பணியாளர் சங்கங்களுடன் கூட்டங்களை நடத்தியது. இதையடுத்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பித்து அரசு அதனை பரிசீலித்து அது தொடர்பான அறிவிப்பை அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ககன்தீப் சிங் குழுவின் இடைக்கால அறிக்கை  

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையினை ஒன்பது மாதங்களில் அரசிற்கு அளித்திட ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்களின் தலைமையில் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு கடந்த பிப்ரவரி 2025-இல் அரசு அமைத்தது.

பின்னர், உரிய அறிக்கையினை செப்டம்பர் 2025-க்குள் அரசிற்கு அளித்திட இக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது. அரசுப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்திட, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் ஒன்பது சுற்றுகள் கூட்டங்களை நடத்தியுள்ளது. மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மற்றும் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது. துல்லியமான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக காப்பீட்டுக் கணிப்பாளர் மற்றும் நிதி வல்லுநர்களின் சேவையையும் குழு பயன்படுத்திக் கொண்டது.

கடந்த எட்டு மாதங்களில், 7.36 லட்சம் பணியாளர்கள் மற்றும் 6.75 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்பட ஓய்வூதியதாரர்களின் தரவுகளை சேகரித்தல், அவற்றில் இருந்த தவறுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை ஓய்வூதியக் குழு விரிவாக மேற்கொண்டுள்ளது. கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான பணிகள், மாநில அரசின் ஓய்வூதிய பொறுப்புகளை மதிப்பீடு செய்வதற்கான உரிய தொழிநுட்ப வழிமுறைகளை வழிவகுக்க உதவியுள்ளன.

சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் மேலும் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் குழு தனது பணியினை இறுதி செய்து அறிக்கையை அளிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இச்சூழ்நிலையில், இக்குழுவானது இன்று (30.09.2025) ஓய்வூதிய திட்டங்கள் குறித்த தனது இடைக்கால அறிக்கையினை அரசிற்கு சமர்ப்பித்துள்ளது. மேற்கூறிய கலந்தாய்வுகளை மேற்கொண்ட பின்னர், குழு தனது இறுதி அறிக்கையினை விரைவில் அரசிற்கு சமர்ப்பிக்கும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு 

இதற்கு தமிழக தலைமை செயலக சங்கத்தினர் ஓய்வூதியக்குழு தன்னுடைய நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக கூறி அக்டோபர் 6ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று (அக்டோபர் 06) தலைமை செயலக ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கும், ககன்தீப் சிங் குழுவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். 

 

 

No comments