எண்ணும் எழுத்தும் பயிற்சி; ஆசிரியர்கள் பங்கேற்க கல்வித் துறை அறிவுறுத்தல்
அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்; தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க கல்வித்துறை அறிவுறுத்தல்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தமிழகத்தில் கடந்த 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசாணையின்படி இந்தத் திட்டம் 2025 முதல் 2027 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் (2025-26) 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சார்ந்து 2 ஆம் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை ஏற்றவாறு குழுக்களாகப் பிரிந்து கருத்தாளர்கள், குழுக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பயிற்சி நாள்களை முடிவு செய்து, மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி நடைபெறும் நாளில் தொடக்க வகுப்புகளில் கல்வி சார்ந்த பணிகள் பாதிக்கப்படக் கூடாது. பயிற்சி நடைபெறும் நாளில் ஆசிரியர் இல்லாத நிலையில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மாற்றுப் பணியில் ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். ஒன்றிய அளவிலான இந்த பயிற்சியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களை பணிவிடுப்பு செய்ய வேண்டும்.. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments